சன.24,2015. “பிறரன்பை நடைமுறைப்படுத்துவது நற்செய்தி அறிவிப்புக்குச் சிறந்த வழி” என்ற வார்த்தைகளை, இச்சனிக்கிழமையன்று தனது டுவிட்டர் செய்தியாக வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், சனவரி 25, புனித பவுல் மனந்திரும்பிய விழாவான இஞ்ஞாயிறு மாலை 5.30 மணிக்கு, உரோம் புனித பவுல் பசிலிக்காவில் கிறிஸ்தவ ஒன்றிப்பு வார நிறைவு திருவழிபாட்டைத் தலைமையேற்று நடத்துகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கிறிஸ்து சமாரியப் பெண்ணிடம் “குடிக்க எனக்குக் கொஞ்சம் தண்ணீர் கொடும்”(யோவா.4,7-8) என்று கிணற்றருகில் கேட்ட இறைச்சொற்கள் இவ்வாண்டின் கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத் தலைப்பாகும். ஒவ்வோர் ஆண்டும் சனவரி 18 முதல் 25 வரைகிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம் கடைப்பிடிக்கப்படுகின்றது.
இன்னும், தெற்கு ஆப்ரிக்காவிலுள்ள மலாவி நாட்டில் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுடன் தனது ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிக்கும் செய்தியையும் அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அனைத்துலக சமுதாயம் தாராளமாக உதவிசெய்யுமாறு கேட்டுள்ள திருத்தந்தை, நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களை ஊக்கப்படுத்தியுள்ளார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |