2015-02-21 15:50:00

காற்று மாசுகேட்டைக் குறைத்தால் வாழ்நாள் அதிகரிக்கும்


பிப்.21,2015. சுற்றுச்சூழலில் காற்று மாசடைவதைக் குறைப்பதற்குத் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டால், இந்தியாவில் வாழும் மக்களில் பாதிப்பேர், அதாவது 66 கோடிப் பேர் தங்களது வாழ்நாளில் 3.2 ஆண்டுகளை அதிகரிக்கலாம் என்று ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

உலகம் முழுவதிலும் நிலவும் காற்று மாசுகேடு குறித்து, சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் செயற்கைக் கோள்கள் மூலம் கிடைத்த தகவல்களைக் கொண்டு சிகாகோ பல்கலைக்கழக பொருளாதார நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வில் இவ்வாறு தெரிய வந்துள்ளது.  

இந்தியாவின் மிக முக்கிய நோக்கம் தற்போது வளர்ச்சியாகவே உள்ளது. ஆனால், அந்நாடு பல ஆண்டுகளாக தனது வளர்ச்சிப் பாதையில் மக்களின் உடல் நலம் மற்றும் காற்று மாசு குறித்து அலட்சியம் செய்து வருகிறது என்று அந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

மேலும், வளர்ச்சியால் ஏற்படும் காற்று மாசு காரணமாக மனிதர்களின் ஆயுள்காலம் வெகுவாகக் குறைந்து வருவதாகவும் அவ்வறிக்கை கூறுகிறது.

உலக நலவாழ்வு நிறுவனத்தின் குறியீட்டில், உலகில் மிக மோசமான அளவில் காற்று மாசு அடைந்திருக்கும் இடங்களில் ஒன்றாக இந்தியாவும் இடம்பெற்றுள்ளது.

ஆதாரம்: PTI /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.