2015-02-27 15:11:00

உலக புகையிலைக் கட்டுப்பாடு ஒப்பந்தத்தின் 10ம் ஆண்டு நிறைவு


பிப்.27,2015. புகையிலைப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் உலகளாவிய ஒப்பந்தம் அமலுக்கு வந்து பத்து ஆண்டுகள் ஆகியும், இவ்வுலகில் புகையிலைப் பயன்பாடு இன்னும் முற்றிலும் ஒழிக்கப்படவில்லை என்று உலக நலவாழ்வு நிறுவனம் கூறியது.

2005ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி இந்த உலகளாவிய ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. இது குறித்து கருத்துப் பேசிய இந்நிறுவனம், புகையிலை தொழிற்சாலைகள் புகையிலை பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கு கோடிக்கணக்கான பணத்தைச் செலவு செய்கின்றன என்று கவலை தெரிவித்தது.

புகையிலைப் பயன்பாட்டால் 2030ம் ஆண்டுக்குள், ஆண்டுக்கு ஏறக்குறைய எண்பது இலட்சம் பேர் இறக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், புகையிலைப் பயன்பாட்டால் ஒவ்வோர் ஆண்டும் நாம் இழக்கும் அறுபது இலட்சம் பேரின் வாழ்வைக் காப்பாற்ற நாம் உழைக்க வேண்டும் எனவும் உலக நலவாழ்வு நிறுவனம் கூறியது.

உலகின் 90 விழுக்காட்டு மக்களை உள்ளடக்கிய 180 நாடுகள் இந்த உலக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. கடந்த பத்து ஆண்டுகளில் 80 விழுக்காட்டு நாடுகள் புகையிலையைக் கட்டுப்படுத்தும் சட்டத்தை ஊக்குவித்துள்ளன மற்றும் ஒரு சிகரெட் பாக்கெட்டின் விலையை 150 விழுக்காடு அதிகரித்துள்ளன.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.