2015-02-27 14:58:00

சிரியாவில் கடும் மனிதாபிமான நெருக்கடி, ஐ.நா. அதிகாரிகள்


பிப்.27,2015. சிரியாவில் கட்டுப்படுத்தமுடியாத அளவுக்கு ஐந்தாவது ஆண்டாக போர் நடந்துவருவதால் கடும் மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று ஐ.நா. பாதுகாப்பு அவையிடம் கூறியுள்ளனர் ஐ.நா. அதிகாரிகள்.

சிரியாவில் போரிடும் குழுவினர் அப்பாவி மக்களைக் கொலை செய்து வருவதாகவும், நாட்டின் உள்கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதால் அப்பாவி மக்கள் சொல்ல முடியாத அளவுக்கு துன்பங்களை அனுபவிக்கின்றனர் என்று ஐ.நா. மனிதாபிமான விவகார அதிகாரி Kyung-Wha Kang கூறினார்.

கடந்த டிசம்பரிலிருந்து ஏறக்குறைய ஆறு இலட்சம் பேர் வரை எந்தவித உணவு உதவியும் பெறவில்லை என்று கூறிய Kang அவர்கள், ஒவ்வொரு மாதமும் ஒரே மாதிரியான உரிமை மீறல் செய்திகளை தாங்கள் கேட்டு வருவதாகவும் கூறினார்.

ஐ.எஸ். பயங்கரவாதிகளால், கடந்த ஓராண்டில் துருக்கிக்குள் இடம்பெயர்ந்துள்ள ஈராக்கியர்களின் எண்ணிக்கை இருபது இலட்சத்தை எட்டியுள்ளது.

இதற்கிடையே, வடக்கு ஈராக்கின் மொசூல் நகரில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் ஐ.எஸ். தீவிரவாதிகள், பழங்காலப் பொருட்களை அழிப்பதைக் காட்டுகின்ற காணொளியை ஐ.எஸ். அரசு வெளியிட்டுள்ளது. பெரிய சிலைகளை இடித்து சுத்தியலால் அவற்றை அடித்து வீழ்த்தி உடைப்பதாக அதில் உள்ளது.

கி.மு. 9-ம் நூற்றாண்டு அசீரிய காலத்தைச் சேர்ந்த, சிறகுகள் கொண்ட காளை மாட்டின் கலைச்சின்னமும் அழிக்கப்பட்ட பொருள்களில் உள்ளது.

ஆதாரம் : UN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.