2015-02-27 15:02:00

நல்ல குடும்பம் நல்ல நாட்டை உருவாக்குகின்றது, நைஜீரிய ஆயர்கள்


பிப்.27,2015. நற்பண்பின் முதல் பள்ளியாகிய குடும்பம், பொருளியக் கோட்பாடு மற்றும் தன்னலத்தால் அச்சுறுத்தப்பட்டுள்ளது, ஆனால் நல்ல குடும்பங்கள் நல்ல நாட்டை உருவாக்குகின்றன என்றும் நைஜீரிய ஆயர்கள் கூறியுள்ளனர்.

2015ம் ஆண்டின் தங்களது முதல் ஆண்டுக் கூட்டத்தை இவ்வியாழனன்று முடித்து அறிக்கை வெளியிட்டுள்ள நைஜீரிய ஆயர்கள், ஆதிக்கம் செலுத்தும் கலாச்சாரமாக உள்ள திரைப்படத் துறைகளும், சமூக ஊடகங்களும், குடும்பத்துக்கும், உறுதியான திருமண வாழ்வுக்கும் மேலும் மேலும் அச்சுறுத்தலை முன்வைக்கின்றன என்று கூறியுள்ளனர்.

Boko Haram தீவிரவாத அமைப்பின் வன்முறைகளையும், வரவிருக்கும் பொதுத்தேர்தல் ஏற்படுத்தியுள்ள பதட்டநிலைகளையும் குறிப்பிடாமல், குடும்பங்கள் எதிர்நோக்கும் சவால்கள் பற்றிப் பேச முடியாது என்றும் ஆயர்கள் தங்களின் அறிக்கையில்   கூறியுள்ளனர்.

மேலும், நைஜீரிய ஆயர்களின் ஆண்டுக் கூட்டத்தில் உரையாற்றிய அந்நாட்டு அரசுத்தலைவர் Goodluck Jonathan அவர்கள், வருகிற மார்ச் 28ம் தேதி நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தல், நைஜீரியாவின் மக்களாட்சியைப் பாதிக்காத வகையில் இடம்பெறும் என்பதற்கு உறுதியளித்துள்ளார்.

இதற்கிடையே, நைஜீரியாவின் வடக்கில் Boko Haram தீவிரவாதிகள் நடத்திய குண்டுவைப்பு தாக்குதலில் 32 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று இவ்வெள்ளிக்கிழமை செய்திகள் கூறுகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.