2015-02-27 15:06:00

மதம் சார்ந்த சமூக வெறுப்பு நடவடிக்கைகள் 2013ல் அதிகம்


பிப்.27,2015. மதம் தொடர்புடைய சமூகக் காழ்ப்புணர்வு நடவடிக்கைகள் இந்தியாவிலும், மத நம்பிக்கைகள் மற்றும் மதத்தைக் கடைப்பிடிப்பது மீது அரசின் கட்டுப்பாடுகள்  சீனாவிலும்  2013ம் ஆண்டில் அதிக அளவில் இடம்பெற்றுள்ளதாக புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.

உலக அளவில் மதத்தின்மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து ஆய்வறிக்கை ஒன்றை இவ்வியாழனன்று வெளியிட்டுள்ள Pew நிறுவனம், மதத்தோடு தொடர்புடைய சமூகக் காழ்ப்புணர்வுகள் 2013ம் ஆண்டில் குறைந்திருந்தாலும், உலகின் 25 விழுக்காட்டு நாடுகளில் இன்னும் இந்நிலை அதிக அளவில் காணப்படுகின்றது என்று குறிப்பிட்டுள்ளது.

மதம் சார்ந்த சொத்துக்களை அழிப்பது, புனித நூல்களை வன்முறைத் தாக்குதலால் இழிவுபடுத்துவது, இத்தாக்குதல்களில் மனிதர் இறப்பது, காயமடைவது என, மதத்தோடு தொடர்புடைய சமூகக் காழ்ப்புணர்வு நடவடிக்கைகளைப் பட்டியலிட்டுள்ளது அந்த ஆய்வறிக்கை.

இந்தியா, சீனா போன்ற (உலக மக்கள் தொகையில் 77 விழுக்காட்டினர்) உலக மக்கள் தொகை அதிகமாகவுள்ள சில நாடுகளில் வாழும் மக்கள், 2013ம் ஆண்டில், தங்களின் மத நம்பிக்கைகளில் அதிக அளவில் கட்டுப்படுத்தப்பட்டனர் என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கின்றது.

மேலும், அமெரிக்க ஐக்கிய நாட்டில், கடந்த மூன்றாண்டுகளில் சமயம் தொடர்புடைய சமூகக் காழ்ப்புணர்வு நடவடிக்கைகள் இரு மடங்குக்குமேல் அதிகரித்துள்ளன என்று ஓர் ஆய்வு கூறுகிறது.

ஆதாரம் : IANS / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.