2015-03-03 14:47:00

கல்வாரியில் இயேசுவின் இறுதி வார்த்தைகள் - பகுதி - 3


வீட்டில் வைக்கப்பட்டிருந்த அழகானப் பளிங்குச் சிலை ஒன்று உடைந்துவிட்டது. இது விபத்தா? தவறா? குற்றமா? அல்லது, மன்னிக்க முடியாத பெரும் குற்றமா? வழக்கை ஆரம்பிப்போம். பளிங்குச் சிலை உடைந்தது, ஒரு நிகழ்ச்சி. ஆனால், அது விபத்தா? தவறா? குற்றமா? என்று தீர்மானிப்பதற்கு, கூடுதலாக விவரங்கள் தேவை. அதைவிட, எந்த கண்ணோட்டத்தில் அந்த நிகழ்ச்சியைப் பார்க்கிறோம் என்பது, முக்கியமான ஓர் அம்சம்.

விவரங்கள் திரட்டுவோம்... உடைந்தது எப்படிப்பட்ட சிலை? சாதாரணமாக சந்தையில் வாங்கப்பட்டதா? அல்லது, நமது பெற்றோரோ, உறவினரோ, நண்பரோ அயல் நாட்டிலிருந்து வாங்கி வந்த பரிசா? அல்லது, பல ஆண்டுகளாய், வீட்டில் பாதுகாக்கப்பட்டு வரும் பாரம்பரியச் சொத்தா? அல்லது, நாம் தினம் தினம் செபங்கள் செய்வதற்கு வீட்டு மாடத்தில் வைக்கப்பட்டுள்ள திரு உருவமா?

உடைந்தது எப்படிப்பட்ட சிலை? என்ற ஒரு கேள்விக்கே இத்தனை கோணங்கள் இருந்தால்... இன்னும் மற்ற கேள்விகளையும் ஆராய வேண்டும். வழக்கைத் தொடர்வோம்.

உடைத்தது யார்? நம் வீட்டின் செல்லப் பிள்ளையா? வீட்டுக்கே பெரியவரா? அல்லது வீட்டில் பணி செய்யும் ஒருவரா?

எப்படி உடைந்தது? தவறுதலாக கவனக்குறைவாக தட்டிவிடப்பட்டதா? அல்லது, பல முறை அதைப்பற்றி எச்சரிக்கைகள் கொடுத்தும் அவற்றைச் சட்டை செய்யாததால் ஏற்பட்டதா? அல்லது கோபத்தில் வேண்டுமென்றே அது உடைக்கப்பட்டதா?

எந்த ஒரு நிகழ்வுக்கும் பின்னணியில் பல விவரங்கள் உள்ளன. அதைப் பார்க்கும் பார்வையில் பல கோணங்கள் உள்ளன. ஒவ்வொரு கோணமும் ஒரு கண்ணோட்டமாகும். அந்தக் கண்ணோட்டத்தைப் பொருத்து, அந்நிகழ்வு ஒரு விபத்தா, தவறா, குற்றமா... என்பது முடிவாகும்.

விபத்து என்றால், மன்னிப்பது எளிதாகும். தவறு என்றால், குற்றம் என்றால், பெரும் குற்றம் என்றால்... மன்னிப்பது கடினமாகும். நிகழ்வின் தீவிரம் எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு மன்னிப்பது கடினமாகும். இந்த தீவிரத்தைக் கூட்டுவதும், குறைப்பதும் எது? நிகழ்வு அல்ல. அதனைக் காணும் கண்ணோட்டம். கண்ணோட்டம் மாறினால், மன்னிப்பு எளிதாகும். மன்னிப்பு எளிதானால், மனநலத்துடன் வாழமுடியும். இந்த வழக்கை ஆரம்பித்ததே, தீர்ப்பு சொல்வதற்கு அல்ல. வாழ்வில் நடக்கும் எந்த ஒரு நிகழ்வையும், மனமிருந்தால், சரியான கண்ணோட்டமிருந்தால் மன்னிக்க முடியும் என்பதைப் புரிந்துகொள்ள.

'தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை' (லூக்கா 23: 34) என்று சிலுவையில் இயேசு கூறிய அந்த அற்புத சொற்களில் ஆரம்பித்து, இயேசுவின் மன்னிப்புப் பாடங்களை நாம் இந்த தவக்காலத்தில் சிந்தித்து வருகிறோம். சென்ற விவிலியத் தேடலில், எத்தனை முறை மன்னிப்பது என்று பேதுருவோடு சேர்ந்து நாம் கேட்டோம். ஏழு முறை, எழுபது முறை என்ற எண்ணிக்கைகளை எல்லாம் கடந்து, எப்போதும் மன்னிக்க வேண்டும். மன்னிப்பது, சுவாசிப்பதைப்போல நமது இயல்பாக மாறவேண்டும் என்று இயேசு பதிலளித்தார். இன்று மன்னிப்பின் மற்றொரு பாடத்தைப் பயில வந்துள்ளோம். யாரை மன்னிப்பது? எதற்கு மன்னிப்பது? என்ற கேள்விகளுக்கு இன்று பதில் தேட முயல்வோம்.

ஒரு சிலை உடைந்துபோன அந்த நிகழ்வுக்குப் பின்னணிகள் வேறுபடும்போது, கண்ணோட்டங்கள் வேறுபடும்போது நிகழ்வின் தீவிரம் கூடும் அல்லது குறையும். அதற்கேற்றது போல், மன்னிப்பு கடினமாகும் அல்லது எளிதாகும். பொருள் ஒன்று உடையும்போதே இத்தனை சிக்கல்கள் இருந்தால், மனம் உடைந்து போகும்போது இன்னும் எத்தனை சிக்கல்கள் இருக்கும்? அனால், மனம் தானாக உடைவதில்லை. நம் மனதை உடையவிடுவதும், உடையாமல் பாதுகாப்பதும், நம் கட்டுப்பாட்டில், கண்ணோட்டத்தில் உள்ளன.

நமது வழக்கை மீண்டும் எடுத்துக் கொள்வோம். நம் குடும்பத்தின் கடைக்குட்டி, கள்ளம் கபடமற்ற குழந்தை, தட்டுத் தடுமாறி நடந்து சென்றபோது, அந்தப் பளிங்குச் சிலைக்கருகே நிலை தடுமாறியதால், சிலைமீது கைவைக்க, அது கீழே விழுந்ததென வைத்துக்கொள்வோம். அந்தச் சிலை உடைந்த சப்தத்தில், குழந்தை வீரிட்டு அழுகிறது, அல்லது அந்த சிலை உடைந்தபோது அதன் ஒரு துண்டு குழந்தையைக் காயப்படுத்தி விடுகிறது... உடைந்த சிலையை விட, அழுகின்ற குழந்தை, அல்லது காயப்பட்ட குழந்தை நம் கவனத்தை, நம் முழு கவனத்தைப் பெறுமல்லவா?

இந்த மாற்றம் எப்படி ஏற்பட்டது? சிலை உடைந்தது, குழந்தை அறியாமல் செய்துவிட்ட ஒரு விபத்து என்ற கண்ணோட்டத்தால், சிலையை விட, குழந்தை நமக்கு முக்கியமாகிப்போனதால், இந்த மாற்றம் நிகழ்ந்தது. விபத்து, தவறு, என்ற எண்ணங்களையெல்லாம் கடந்து, அழுகின்ற குழந்தையை  வாரி அணைக்க வேண்டுமென்ற பாசமும், அன்பும், மற்ற உணர்வுகளை புறந்தள்ளி விடுகின்றன. இல்லையா? அந்த அணைப்பில், மன்னிப்பு என்ற உண்மை, சந்தடியின்றி கலந்துவிடுகிறது.

அறியாமல் நடந்து விட்டதாய் நாம் உணரும் ஒரு நிகழ்வுக்கு, அந்த நிகழ்வுடன் தொடர்புள்ளவர்கள் நமக்கு மிக நெருங்கியவர்கள் என்பதை உணரும்போது, மன்னிப்பு அளிப்பது எளிது. ஆனால், எச்சரிக்கைகளைத் தூர எறிந்துவிட்டு, மனசாட்சியை மதிக்காமல், திட்டமிட்டு குற்றம் புரிவோரை, சந்திக்கும்போது, மன்னிக்க முடியாமல் கஷ்டப்படுகிறோம். இந்தச் சூழலிலும் நம் மன்னிப்பை எப்படி எளிதாக்க முடியும் என்பதுதான் அன்று கல்வாரியில் இயேசு சொல்லித்தந்த பாடம்.

‘தந்தையே, இவர்களை மன்னியும்…’ என்ற இயேசுவின் இந்த அற்புதச் சொற்களை நாம் அடிக்கடி கேட்டுவிட்டதால், இந்த வார்த்தைகளை இயேசு மிக அமைதியாக, சர்வ சாதாரணமாக, சம்பிரதாயத்திற்காக சொன்னது போல் உணரும் ஆபத்து உண்டு. ஆனால், அன்பர்களே, நான் ஏற்கனவே சொன்னது போல், சிலுவையில் தொங்கியவண்ணம், இந்த வார்த்தைகள் ஒவ்வொன்றையும் சொல்வதற்கு இயேசு உடலளவில் மரண வேதனை அடைந்திருப்பார். அதேபோல், உள்ளத்தளவிலும், இந்த வார்த்தைகளைச் சொல்லும் உன்னத நிலைக்கு வருவதற்கு, மனிதர் என்ற முறையில், இயேசு, மிகவும் போராடியிருப்பார். அந்த போராட்டத்தின் இறுதியில் இயேசு கொண்ட கண்ணோட்டம், அதன் விளைவாய் அவர் எடுத்த முடிவு, அந்த விண்ணப்பமாய் தந்தையை நோக்கி எழுகிறது.  தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை என்று சொல்கிறார்.

தெளிவாகத் திட்டமிட்டு செய்த குற்றத்தை, 'தெரியாமல் செய்ததாக' எப்படி இயேசுவால் கூறமுடிந்தது? இயேசு தந்தையிடம் பொய் சொல்கிறாரா? குற்றங்களை மூடி மறைக்கிறாரா? நம் இல்லங்களில் இதையொத்த ஒரு சம்பவம் அடிக்கடி நடக்கும். தவறு செய்துவிட்ட மகனுக்காக, மகளுக்காக அப்பாவிடம் பேசும் அம்மாக்களை நினைத்துப் பார்க்கலாம். அந்தத் தவறை பல வழிகளில் மூடி மறைக்கவோ, அல்லது வேறுவிதமாகச் சொல்லவோ அவர்கள் முற்படுவார்கள்.  இயேசு, யூத குருக்களின், உரோமையப் படை வீர்களின் குற்றங்களை இறைவனிடம் சொல்வதை இப்படி ஒரு கண்ணோட்டத்தில் பார்க்கலாம். பரிந்து பேசுவது என்று இதற்கு நாம் பெயரிடுகிறோம். இயேசு சொல்வது பொய் என்று சொல்வதற்குப் பதில், பரிவினால், அன்பினால் எழுந்த வித்தியாசமான ஒரு கண்ணோட்டம் என்று சொல்லலாம்.

உரோமைய வீரர்கள், மற்றும், யூத மதத் தலைவர்களின் கண்ணோட்டத்திலிருந்து இந்த சிலுவைத் தண்டனையைப் பார்க்க முயற்சி செய்வோம். தங்களிடம் சித்திரவதைப் பட்டு, சிலுவையில் அறையப்பட்டுள்ளவர், கடவுள் என்று தெரிந்திருந்தால், உரோமைய வீரர்கள், அல்லது யூத மதத் தலைவர்கள் இப்படி செய்திருப்பார்களா? ஒரு கடவுளை, கடவுளின் மகனைக் கொல்வதற்கு யாருமே தயங்குவார்கள். ஆனால், இந்த ஆள் கடவுளாக அவர்கள் கண்களுக்குத் தெரியவில்லையே. வெளிப்படையாகப் பார்ப்பதற்கு, இயேசு சாதாரணமான, ரொம்ப, ரொம்ப சாதாரணமான மனிதனாக, ஒரு தொழிலாளியாகத்தான் அவர்கள் கண்களுக்குத் தெரிந்தார். அந்த சாதாரண ஆள், தங்கள் அரசுக்கு எதிராகக் கிளம்பிவிட்டார் என்று உரோமைய வீரர்கள் நினைத்தனர். தாங்கள் இதுவரைக் கட்டிக்காத்த யூத மத சட்ட திட்டங்களை எல்லாம் கேள்விக்குறியாக்கி, அவர்கள் வணங்கி வந்த யாவே இறைவனின் இலக்கணத்தையே மாற்ற முயல்கிறார் ஒரு கிராமத்து இளைஞன் என்று யூத மதத் தலைவர்கள் நினைத்தனர். எனவே தங்கள் அரசு அழிந்து விடக்கூடாது என்ற வெறியில் உரோமைய வீர்களும், தங்கள் சட்ட திட்டங்கள் மாறிவிடக்கூடாது என்ற வெறியில் மதத் தலைவர்களும் இயேசு என்ற பிரச்சனையை முளையிலேயே கிள்ளிவிட முடிவு செய்தனர். அதற்கென அவர்கள் எடுத்த முயற்சிதான் சிலுவை தண்டனை. அந்த வெறி அவர்களது அறிவுக்கண்களை மறைத்துவிட்டது என்பதை முற்றிலும் உணர்ந்த இயேசு, தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை என்று அவர்களைப்பற்றி தந்தையிடம் விண்ணப்பம் தருகிறார். இது பொய் அல்ல; அவர்கள்மீது கொண்ட பரிவால் எழுந்த வேறொரு கண்ணோட்டம்.

எத்தனை முறை மன்னிக்கவேண்டும் என்ற கேள்விக்கு, கணக்கு பார்க்காமல், எப்போதும் மன்னிக்கவேண்டும் என்று பதில் சொன்னார் இயேசு. எதற்காக மன்னிக்கவேண்டும் என்ற கேள்விக்கு, காரணம் பார்க்காமல் மன்னிக்கவேண்டும் என்கிறார் இயேசு. பொதுவாகவே, சுவாசிப்பது எப்படி மனித இயல்போ, அவ்வாறே மன்னிப்பதும் மனித இயல்பாக மாறவேண்டும் என்று இயேசு சொல்கிறார்.

Mark Twain அவர்கள், மன்னிப்பை ஓர் உருவகமாக கூறும் வார்த்தைகள் என் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளன: “Forgiveness is the fragrance that the violet sheds on the heel that has crushed it” அதாவது, “தன்னை மிதித்த கால்களில் தன் நறுமணத்தைப் பதிக்கிறதே மலர். அதுவே மன்னிப்பு.”

நம்மைச் சுற்றியுள்ள இயற்கையில் இதுபோல் பல நூறு உதாரணங்களைக் காணலாம். தன்னைக் கசக்கிப் பிழிபவன் கையில் இனிய சாராய் மாறுகிறதே கரும்பு; அதுவே மன்னிப்பு. தன்னைச் சுட்டெரித்தாலும் நறுமணம் தருகிறதே சந்தனம்; அதுவே மன்னிப்பு. தங்களை வெட்டுகிறார்கள், விறகாய் எரிக்கிறார்கள் என்பதற்காக மரங்கள் நிழல் தர மறுக்கின்றனவா? இல்லையே. கலீல் கிப்ரான் என்ற கவிஞர் சொன்ன வரிகள் நினைவுக்கு வருகின்றன: கொடுப்பதே மரத்தின் இயல்பு, அழகு. நிழல் கொடுக்க, கனி கொடுக்க ஒரு மரம் மறுத்தால், அது இறந்து விடும், அதன் இயல்பு மாறிவிடும்.

இயற்கையில் இப்படி ஒவ்வொன்றும் தங்கள் இன்னல்களைப் பெரிதுபடுத்தாமல் கொடுப்பதையே தங்கள் இயல்பாக ஆக்கிக் கொள்ளும்போது, மனித இயல்பு மட்டும், ஏன் நேரத்திற்கு ஒன்றாய் மாறுகிறது?

நாம் வாழ்வில் தொடர்ந்து தேடும் அமைதியை, அன்பை அடைய அடித்தளம், மன்னிப்பு. மன்னிப்பு தருவதும், பெறுவதும் முழு மனித நிறைவுக்கு நம்மை இட்டுச்செல்லும். அசிசி நகர் புனித பிரான்சிஸ் அவர்கள் இயற்றிய “அமைதியின் கருவியாய் என்னை மாற்றும்” என்ற அற்புத செபத்தின் ஒரு பகுதியோடு நம் சிந்தனைகளை நிறைவு செய்வோம்.

"மன்னிப்பதாலேயே, மன்னிப்பு பெறுகிறோம்.

கொடுப்பதாலேயே பெறுகிறோம்.

இறப்பதாலேயே நிறைவாழ்வில் பிறக்கிறோம்."

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.