2015-03-24 15:46:00

காச நோயால் ஆண்டுதோறும் 15 இலட்சம் பேர் இறப்பு


மார்ச்,24,2015. TB என்ற காச நோயை ஒழிப்பதில் கடந்த பதினைந்து ஆண்டுகளில் உலகம் வெற்றி கண்டுள்ளபோதிலும், 2035ம் ஆண்டுக்குள் இந்நோயை முழுவதுமாக ஒழிப்பதற்கு உலகினர் அனைவரும் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்குமாறு அழைப்பு விடுத்தார் ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன்.

ஆயினும், 2013ம் ஆண்டில் ஏறக்குறைய 90 இலட்சம் பேர் இந்நோயால் தாக்கப்பட்டனர் மற்றும் 15 இலட்சம் பேர் இறந்தனர் என்பதால் இவ்வெற்றியை நாம் முழுமையாகக் கொண்டாட முடியாது என்றும் பான் கி மூன் அவர்கள் கூறினார்.

மார்ச் 24, இச்செவ்வாயன்று கடைப்பிடிக்கப்பட்ட உலக காச நோய் ஒழிப்பு தினத்துக்கென வெளியிட்ட செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார் பான் கி மூன்.

இந்நோய்க்கு வழங்கப்பட்ட சிகிச்சை மூலம் 2000த்துக்கும் 2013ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் ஏறக்குறைய 3 கோடியே 70 இலட்சம் மக்களின் வாழ்வு காப்பாற்றப்பட்டுள்ளது என்றும் கூறிய பான் கி மூன் அவர்கள், இன்னும் இருபது ஆண்டுகளுக்குள் இந்நோயை முழுவதுமாக ஒழித்துவிட வேண்டுமென்று 2014ம் ஆண்டில் உலக நலவாழ்வு நிறுவனம் யுக்திகளை அமைத்து செயல்பட்டு வருவதையும் குறிப்பிட்டார்.

பெண்கள் 15க்கும் 44 வயதுக்கும் இடைப்பட்ட காலத்தில் TB நோய்க் கிருமிகளால் தாக்கப்படுக்ன்றனர். சிறார், கைதிகள், குடியேற்றதாரர், HIV நோயாளிகள் போன்றோரின் இறப்புக்குக் காரணமாகும் ஐந்து முக்கிய நோய்களில் TBயும் ஒன்றாகும்.

ஆதாரம் : UN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.