2015-03-25 15:31:00

மார்ச் 25 - அடிமைகள் வர்த்தகம் நினைவாக, உலக நாள்


மார்ச்,25,2015. பல்வேறு வடிவங்களில் வெளிப்படும் இனவெறியில் அடங்கியுள்ள ஆபத்தை இவ்வுலகம் உணர்வது மிகவும் அவசியம் என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அவர்கள் கூறினார்.

உலக வரலாற்றின் மிகத் துன்பம் நிறைந்த ஒரு நிகழ்வின் நினைவுச் சின்னம் ஒன்று, இப்புதனன்று, நியூயார்க் நகர், ஐ.நா. தலைமையகத்தில் திறந்து வைக்கப்பட்ட போது, பான் கி மூன் அவர்கள் இவ்வாறு உரையாற்றினார்.

அட்லாண்டிக் கடல் வழி நடைபெற்ற அடிமைகள் வர்த்தகம், மற்றும் உலகெங்கும் அடிமைகளாகத் துன்புறுவோரின் நினைவாக மார்ச் 25, இப்புதனன்று, சிறப்பிக்கப்படும் உலக நாளையொட்டி, ‘The Ark of Return,’ அதாவது, 'திரும்புதலின் நம்பிக்கைப் பேழை' என்ற நினைவுச் சின்னம் ஐ.நா. தலைமையகத்தில் திறந்து வைக்கப்பட்டது.

83 நாடுகளிலிருந்து, 310 கலைஞர்கள் வடிவமைத்த பல நினைவுச் சின்னங்களில், ஹெயிட்டி நாட்டில் பிறந்து, அமெரிக்காவில் வாழும், Rodney Leon என்பவர் வடிவமைத்த ‘The Ark of Return’ நினைவுச் சின்னம் தேர்ந்தெடுக்கப்பட்டது. 

அட்லாண்டிக் கடல் வழி அடிமைகள் வர்த்தகம், 1 கோடியே 50 இலட்சம் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று அனைவரையும் வதைத்த ஒரு வரலாற்று நிகழ்வு என்பதால், அந்நினைவு, கடந்த ஏழு ஆண்டுகளாக, மார்ச் 25ம் தேதி, ஓர் உலக நாளாக சிறப்பிக்கப்பட்டு வருகிறது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.