2015-03-25 15:48:00

வாழ்வுக் கலாச்சாரத்தை நிலைநாட்டுவது கிறிஸ்தவர்களின் கடமை


மார்ச்,25,2015. கருத்தடை, கருக்கலைப்பு, உயிரணுக்கள் மாற்ற ஆய்வுகள், உதவி செய்யப்படும் தற்கொலைகள் என்று இவ்வுலகம் அழிவுக் கலாச்சாரத்தைப் பரப்பும் வேளையில், நாம் மனம் தளராமல் உயிரைப் போற்றிக் காக்கும் முயற்சிகளை, தீவிரமாக மேற்கொள்ளவேண்டும் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

திருத்தந்தை புனித 2ம் ஜான்பால் அவர்கள் எழுதிய “Evangelium Vitae”, அதாவது, 'வாழ்வின் நற்செய்தி' என்ற சுற்றுமடலின் 20ம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், சுலோவாக்கியா ஆயர்கள் பேரவை ஏற்பாடு செய்திருந்த ஒரு கருத்தரங்கில், ஆயர்கள் மாமன்றங்களை ஏற்பாடு செய்யும் செயலராகப் பணியாற்றும் கர்தினால் Lorenzo Baldisseri  அவர்கள், இப்புதனன்று உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.

அழிவுக் கலாச்சாரத்தை எதிர்த்து, வாழ்வுக் கலாச்சாரத்தை நிலைநாட்டும் கடமை கத்தோலிக்கத் திருஅவைக்கு இன்று சிறப்பாக வழங்கப்பட்டுள்ள ஓர் அழைப்பு என்று கர்தினால் Baldisseri  அவர்கள், தன் உரையில் வலியுறுத்தினார்.

இப்புதனன்று கொண்டாடப்பட்ட ஆண்டவர் அறிவிப்பின் பெருவிழாவில், இறைவன் தந்த அழைப்பிற்கு 'ஆம்' என்று சொன்ன அன்னைமரியா, வாழ்வை ஆதரிக்க நாம் சொல்லும் ஒவ்வொரு 'ஆம்' என்ற முயற்சியையும் ஆசீர்வதிக்கிறார் என்று கர்தினால் Baldisseri  அவர்கள், எடுத்துரைத்தார்.

இதற்கிடையே, திருப்பீடத்தின் பல்சமய உரையாடல் அவையின் தலைவர், கர்தினால் Jean-Louis Tauran அவர்கள், 2015ம் ஆண்டின் அமைதிப் பரிசினைப் பெறும் மூவரில் ஒருவர் என்று, Ducci அறக்கட்டளை அறிவித்துள்ளது.

Paolo Ducci என்ற இத்தாலியர், 1999ம் ஆண்டு, தன் பெற்றோர், Francesco Paolo, மற்றும் Annamaria ஆகியோரின் நினைவாக உருவாக்கிய Ducci அறக்கட்டளை, பல்சமய உரையாடல் மற்றும் பல்வேறு அமைதிப்பணிகளில் ஈடுபடும் தலைசிறந்த மனிதர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் இந்த விருதினை வழங்கி வருகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.