2015-03-26 16:16:00

ஏப்ரல் 19 முதல் புனிதத்துணி மக்கள் பார்வைக்கு வைக்கப்படும்


மார்ச்,26,2015. புனித ஜான் போஸ்கோ அவர்கள் பிறந்ததன் இரண்டாம் நூற்றாண்டு நினைவாக தூரின் நகருக்கு வருகை தரும் திருப்பயணிகளுக்கு, ஏப்ரல் 19ம் தேதி முதல் ஜூன் 24ம் தேதி முடிய, இயேசுவின் அடக்கத்திற்கு பயன்படுத்தப்பட்ட புனிதத்துணி மக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என்று தூரின் உயர் மறைமாவட்டப் பேராயர் Cesare Nosiglia அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த சிறப்பு ஆண்டின் ஒரு முக்கிய நிகழ்வாக, ஜூன் 21, 22 ஆகிய நாட்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தூரின் நகரில் மேற்கொள்ளும் பயணம், இளையோரின் புனிதர் என்றழைக்கப்படும் புனித ஜான் போஸ்கோ அவர்களுக்கு நன்றி சொல்லும் வகையில் அமையும் என்று பேராயர் Nosiglia அவர்கள் கூறினார்.

திருத்தந்தையின் இந்தப் பயணத்தின்போது, தூரின் நகரில் இளையோரின் சிறப்புக் கூட்டம் நடைபெறும் என்றும், உலக இளையோர் நாள் நிகழ்ச்சிக்கென Krakow நகருக்கு எடுத்துச் செல்லப்படும் சிறப்புச் சிலுவை, ஜூன் 21, 22 ஆகிய நாட்கள் தூரின் நகரில் வைக்கப்படும் என்றும் பேராயர் Nosiglia அவர்கள் அறிவித்தார்.

மேலும், ஏப்ரல் 19ம் தேதி முதல் புனிதத் துணியைக் காணவரும் பக்தர்கள் அளிக்கும் காணிக்கைத் தொகை முழுமையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வருகையின்போது, அவரது தர்மப் பணிகளுக்கென அளிக்கப்படும் என்றும் பேராயர் Nosiglia அவர்கள் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.