2015-03-27 15:13:00

அருள்சகோதரி பாலியல் வன்கொடுமை வழக்கு சிபிஐ விசாரணை மறுப்பு


மார்ச்,27,2015. இந்தியாவை உலுக்கிய எழுபது வயதுக்கு மேற்பட்ட அருள்சகோதரி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான நிகழ்வு குறித்து மேற்கு வங்க மாநில அரசு கோரியிருந்த சி.பி.ஐ. விசாரணையை மத்திய அரசு நிராகரித்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் உள்ள கங்கனாபூர் அருகே Ranaghat  ஜீசஸ் மேரி சபையினர் நடத்தும் பள்ளி இயங்கி வருகிறது. இங்குள்ள அருள்சகோதரிகள் இல்லத்தில் கடந்த 14ம் தேதி அதிகாலையில் ஆறுபேர் அடங்கிய ஒரு குற்றக்கும்பல் உள்ளே புகுந்து பள்ளியில் இருந்த பொருள்களை அடித்து நொறுக்கியது.

அதைத் தடுக்க வந்த அந்த அருள்சகோதரியை அந்தக் கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, 12 இலட்சம் ரூபாயையும் கொள்ளையடித்துச் சென்றது. இந்நிகழ்வு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரை செய்திருந்தார். ஆனால், மத்திய அரசு அவரது கோரிக்கையை இவ்வெள்ளியன்று நிராகரித்துள்ளது.

இதற்கிடையே, இந்தப் பாலியல் வன்கொடுமை தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆதாரம் : The Hindu / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.