2015-03-27 14:43:00

ஈராக், நைஜீரியாவில் புலம்பெயர்ந்துள்ள மக்களுடன் ஒருமைப்பாடு


மார்ச்,27,2015. ஈராக்கில் வன்முறைக்குப் பலியாகி, தங்கள் வீடுகளையும் கிராமங்களையும் விட்டு வெளியேறியுள்ள கிறிஸ்தவக் குடும்பங்கள் மற்றும் பிற மக்கள் குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருப்பீட செய்தித் தொடர்பகம் இவ்வெள்ளியன்று வெளியிட்ட அறிக்கையில், ஈராக்கின் மொசூல் மற்றும் நினிவே சமவெளிப் பகுதியிலிருந்து வெளியேறி அந்நாட்டின் குர்திஸ்தான் பகுதியில் அடைக்கலம் தேடியிருக்கும் மக்கள் குறித்து திருத்தந்தை மிகுந்த அக்கறை கொண்டுள்ளார் என்று கூறியுள்ளது.

நூற்றாண்டுகளாக தங்களுக்கு அடுத்திருப்பவர்களோடு நல்ல உறவுகளோடு வாழ்ந்துவந்த இம்மக்கள் விரைவில் தங்களின் சொந்த இடங்களுக்குத் திரும்புவார்கள் என்று திருத்தந்தை நம்புவதாகவும், அம்மக்களுக்காக திருத்தந்தை செபிப்பதாகவும் அவ்வறிக்கை கூறுகின்றது.

இந்த ஈராக் கிறிஸ்தவக் குடும்பங்கள் வருகிற புனித வாரத்தில் கிறிஸ்துவின் துன்பங்களில் சிறப்பான விதத்தில் பங்குகொள்கின்றனர் என்றும், இப்புனித வாரத்தில் கிறிஸ்தவர்களோடு இருந்து செபிப்பதற்கு நற்செய்தி அறிவிப்பு திருப்பேராயத் தலைவர் கர்தினால் Fernando Filoni அவர்கள் ஈராக் செல்கிறார் என்றும் திருப்பீட அறிக்கை தெரிவிக்கிறது.

உரோம் மறைமாவட்டம் இம்மக்களுக்கென சிறப்பாக நிதி திரட்டி, அப்பணத்தோடு இத்தாலிய இனிப்புகளையும் அனுப்புகிறது.

மேலும், நைஜீரியாவின் வடபகுதியில் துன்புறும் குடும்பங்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிப்பதாகவும், நைஜீரிய ஆயர்களும் தன்னோடு இணைந்து இதே ஒருமைப்பாட்டை இக்குடும்பங்களுக்குத் தெரிவிக்குமாறு திருத்தந்தை கேட்டிருப்பதாகவும் திருப்பீட அறிக்கை கூறுகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.