2015-03-27 15:07:00

உக்ரைன் ஒப்பந்தத்தை அனைத்துத் தரப்பினரும் அமல்படுத்த அழைப்பு


மார்ச்,27,2015. உக்ரைன் நிலப்பகுதியையும், அதன் எல்லைகளையும் அனைத்துலக சட்டத்தின்படி மதிப்பதே, உக்ரைன் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி முழுவதன் நிலையான தன்மையை உறுதி செய்வதற்குரிய முக்கிய கூறாக உள்ளது என்று திருப்பீடம் அனைத்துலக சமுதாயத்திடம் கூறியுள்ளது.

ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா. மனித உரிமைகள் அவையின் 28வது கூட்டத்தில், உக்ரைன் நிலைமை பற்றிய அமர்வில் இவ்வியாழனன்று உரையாற்றிய பேராயர் சில்வானோ தொமாசி அவர்கள், உக்ரைன் குறித்த ஒப்பந்தங்களை அனைத்துத் தரப்பினரும் நடைமுறைப்படுத்த உழைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

பேச்சுவார்த்தைகள் மூலம் அரசியல் தீர்வு காண்பதற்கு போர் நிறுத்தம் அவசியம் எனவும், உக்ரைனில் இடைக்காலப் போர் நிறுத்தத்தை அமல்படுத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை திருப்பீடம் வரவேற்றுள்ளதாகவும் உரைத்தார்  பேராயர் தொமாசி.

பேராயர் தொமாசி அவர்கள், ஜெனீவாவிலுள்ள ஐ.நா.அலுவலகங்களுக்குத் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராகப் பணியாற்றுகிறார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.