உலகின் பல நாடுகளில் (கனடா, ஹாங்காங், இந்தியா, ஜப்பான், மியான்மார், பிரித்தானியா, தென் ஆப்ரிக்கா) மார்ச் 31ம் தேதி, நிதி ஆண்டின் இறுதி நாள். கணக்கு வழக்குகள், வரி செலுத்துதல் ஆகியவை நிறைவுக்கு வரும் நாள். அதற்கு அடுத்த நாள், அதாவது, ஏப்ரல் 1ம் தேதி, புதிய நிதி ஆண்டு துவங்குகிறது. அதே, ஏப்ரல் 1ம் தேதி, முட்டாள்கள் தினம் என்றும் அழைக்கப்படுகிறது. மார்ச் 31ம் தேதி, உண்மையான கணக்கு வழக்குகள், சரியான, நேர்மையான வரி செலுத்துதல் ஆகிய கடமைகளை மனசாட்சியுடன் முடிப்பவர்களை, முட்டாள்கள் என்று சொல்லாமல் சொல்வதற்கு, ஏப்ரல் முதல் தேதி, முட்டாள்கள் தினம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
நாம் துவக்கியுள்ள புனித வாரத்தில், மனசாட்சியுடன் கணக்கை ஒப்படைக்கும் நாள், முட்டாள்கள் தினம் இரண்டும் இடம் பெறுவது, நம் சிந்தனைகளை இன்னும் ஆழப்படுத்துகிறது. தன் மனசாட்சியின் குரலுக்கு முற்றிலும் செவிசாய்த்ததால், கல்வாரியில், சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த இயேசுவை, சூழ நின்றவர்களில் பலர், மதி இழந்தவர் என்று ஏளனம் செய்ததை நாம் அறிவோம். அவர்களது பார்வையில், முட்டாளாகத் தெரிந்த இயேசு, தன் வாழ்வின் கணக்கு வழக்குகள் சரியான வகையில் அமைந்தன என்ற நிறைவோடு, "எல்லாம் நிறைவேறிற்று" (யோவான் 19: 30); "தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்." (லூக்கா 23: 46) என்ற அற்புத வார்த்தைகளுடன் இவ்வுலகிலிருந்து விடைபெற்றார்.
வாழ்க்கையை, சிறப்பாக, வாழ்க்கையின் முடிவை, கணக்கு வழக்கோடு ஒப்பிட்டு பேசுகிறோம். மரணத்தைப்பற்றி பேசும்போது, ஒருவரது கணக்கை கடவுள் முடித்துவிட்டார் என்றும், மனிதன் போட்ட கணக்கு வேறு; இறைவன் போட்ட கணக்கு வேறு என்றும் சோல்கிறோம்.
மார்ச் 31ம் தேதி, கணக்கு வழக்குகளை நேர்மையாய் முடித்தவர்கள், உலக வழக்கின்படி முட்டாள்களாகத் தெரிந்தாலும், நிம்மதியாய்த் உறங்கச் செல்வர். தப்புக் கணக்குகள் எழுதியவர்கள்... உறக்கமின்றி தவிக்க வேண்டியிருக்கும். வாழ்வின் இறுதியில் நித்திய உறக்கத்திற்குப் போகிறவர்களும், வாழ்க்கைக் கணக்குகளை ஒழுங்காக முடித்திருந்தால், நிம்மதியாக நித்திய உறக்கத்தில் ஆழமுடியும். வாழ்க்கைக் கணக்கு தாறுமாறாக இருந்தால், தவிக்க வேண்டியிருக்கும். அந்தத் தவிப்பு, மரணப் படுக்கையில் வெளிப்படும்.
ஓர் அருள்பணியாளர் என்ற முறையில் ஒரு சிலரது வாழ்வின் இறுதிக் கட்டத்தில் ஆன்மீக அளவில் உதவிகள் செய்திருக்கிறேன். 80 வயதைத் தாண்டிய ஒருவருக்கு, ஒரு முறை, அவ்விதம் உதவிசெய்ய அவர் வீட்டுக்குச் சென்றபோது, அவர் ஏற்கனவே சுயநினைவை இழந்திருந்தார். மிகக் கடினப்பட்டு மூச்சு விட்டுக் கொண்டிருந்தார். நான் அவர் தலைமீது கைவைத்து வேண்டினேன். சிறிதுநேரம் கழித்து, அவரது உயிர் பிரிந்தது.
அப்போது சூழ இருந்தவர்கள், "நீங்க வந்து கை வைக்கணும்னு காத்திருந்தது போல இருந்துச்சு..." என்று சொன்னார்கள். அவர் ஏறக்குறைய மூன்று நாட்கள் சுய நினைவை இழந்திருந்தார், கடைசி ஒரு நாள் மூச்சு இழுத்துக்கொண்டிருந்தது என்றெல்லாம் அறிந்தேன். அவரது இறுதிச் சடங்குகள் முடிந்து, என் அறைக்கு வந்தபின், இறக்கும் நிலையில் உள்ளவர்கள், இறுதி நேரத்தில் சந்திக்கும் போராட்டம் பற்றி சிந்தித்தேன். என் இந்த போராட்டம்? ஒரு வேளை, இறுதி நேரத்தில் எதையாவது சொல்ல நினைத்தார்களோ? அந்த இறுதி மூச்சு போகுமுன், அவர்கள் மனதில், எவ்விதமான எண்ணங்கள் ஓடியிருக்கும்? யாராலும் கண்டுபிடிக்க முடியாது.
பொதுவாகவே, எதையாவது சொல்ல வந்துவிட்டு, சூழ்நிலை காரணமாக, அதைச் சொல்ல முடியாமல் போகும்போது, அந்த வார்த்தைகள் தொண்டைக் குழிக்குள் சிக்கிக் கொண்டதாகச் சொல்கிறோம் இல்லையா? வாழ்வின் இறுதிக் கட்டத்தில், வார்த்தைகளோ, எண்ணங்களோ தொண்டைக் குழிக்குள் அல்லது சிந்தனை வலைக்குள் சிக்கிக் கொள்ளும்போது, அந்த உயிர் பிரிவதற்கு போராடுகிறது என்று நாம் எண்ணுகிறோம்.
அதற்கு மாறாக, பிரச்சனைகள் எழும்போது, சொல்லவேண்டிய உண்மைகளை, அவை கசப்பான உண்மைகளாயினும், அவற்றைச் சொல்லி, மன அமைதியுடன் வாழ்பவர்கள், நிறைவைக் கண்டவர்கள். தவிப்போ, தயக்கமோ இன்றி, தங்கள் இறுதி நேரத்தை நெருங்கும் அவர்கள், அமைதியாக, நிறைவாக, இவ்வுலகிலிருந்து விடைபெற்றுச் செல்வதையும் நாம் பார்த்திருக்கிறோம்.
அத்தகைய ஒரு நிறைவோடு, அமைதியோடு இயேசு இவ்வுலக வாழ்விலிருந்து விடைபெற்றுச் சென்றார். அவர் சிலுவையில் சொன்ன இறுதிச் சொற்கள்: "எல்லாம் நிறைவேறிற்று" (யோவான் 19: 30) என்பதும், "தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்." (லூக்கா 23: 46) என்பதும். ஆனால், இந்த அமைதியான, நிறைவான முடிவை அடைவதற்கு முன், சிலுவையில், இயேசுவும் போராடினார்.
இயேசுவின் இறப்பு, அமைதியாக இருந்ததென்று நற்செய்தியாளர்கள், யோவான், லூக்கா இருவரும் குறிப்பிடும்போது, மத்தேயு, மாற்கு இருவரும் “இயேசு உரக்கக் கத்தி உயிர் நீத்தார்” (மத். 27: 50 மாற். 15: 37) என்று கூறியுள்ளனர். இயேசு இறுதியாகச் சிலுவையில் சொன்னதாக இவ்விருவரும் குறிப்பது, போராட்டத்தின் உச்சியில் ஓர் உள்ளம் கதறிச் சொல்லும் வார்த்தைகள்: "எலோயி, எலோயி, லெமா சபக்தானி?... என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?" (மத். 27: 46 மாற். 15: 34)
நான்கு நற்செய்திகளையும் ஒரு சேரப் பார்க்கும்போது, முழுமையான ஒரு காட்சி நமக்குக் கிடைக்கிறது. இயேசுவும் தன் இறுதி கணக்கை முடிக்கும்போது, தடுமாறினார், போராடினார், தந்தையை நோக்கி "ஏன் என்னைக் கைவிட்டீர்?" என்று கதறினார். ஆனால், இறுதி நேரத்தில், தன் பணி முழுமை பெற்றது, தன் கணக்கு சரிவர முடிந்தது என்ற திருப்தியுடன் அவர் விடைபெற்றார். அத்தகைய ஓர் அமைதியை, சாகும் நேரத்தில் அடைவதற்கு, இயேசு, பல நிலைகளைக் கடந்து வந்திருக்க வேண்டும்.
சாவை எதிர்நோக்கியிருக்கும் ஒருவர் கடந்துசெல்லும் நிலைகளை, Elisabeth Kübler-Ross என்ற மனநல மருத்துவர், ஒரு நூலில் அழகாக விவரிக்கிறார். புற்று நோய் முற்றிய நிலையில், தங்கள் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் நோயாளிகள் நடுவில் பல ஆண்டுகள் பணியாற்றிய Kübler-Ross அவர்கள், 1969ம் ஆண்டு எழுதிய “On Death and Dying” என்ற நூல், இன்றும் பலராலும் போற்றப்படுகிறது. மரணத்திற்காகக் காத்திருக்கும் நோயாளிகளை, Terminally Ill Patients அதாவது, இறுதிநிலை நோயில் இருப்பவர்கள் என்று சொல்கிறோம். இந்நிலையில் உள்ள பல நூறு நோயாளிகளைச் சந்தித்து, மரணத்தை எதிர்கொள்ள அவர்கள் நிகழ்த்தும் போராட்டங்களில் பங்கேற்று, அவர்களுக்குப் பல ஆண்டுகள் உதவியபின், Kübler-Ross அவர்கள், தன் அனுபவங்களைத் தொகுத்து எழுதிய புத்தகம் இது. மரணம் நிச்சயம் என்பது தெரிந்த அந்த நேரத்திலிருந்து நோயாளிகள் மேற்கொள்ளும் இறுதிப் பயணத்தை, அவர், ஐந்து நிலைகளில் விளக்கியுள்ளார். அந்த ஐந்து நிலைகள் நம் சிந்தனைகளுக்கு உதவும்.
புற்று நோய் தன் மரணத்திற்கு நாள் குறித்துவிட்டது என்பதை உணர்ந்தவர்கள் முதலில் மறுப்பு நிலையில் இருப்பதாக Kübler-Ross அவர்கள் கூறுகிறார். “No, this can't be... not me... இப்படி இருக்காது, நடக்காது, அதுவும் எனக்கு இப்படி நடக்காது” என்றெல்லாம், அவர்கள், அச்செய்தியை ஏற்க மறுப்பார்கள்.
இரண்டாம் நிலையில் கோபம் எழும். “ஏன் எனக்கு? நான் என்ன செய்தேன்? இது அநியாயம்.” என்று கோபப்படுவார்கள்.
மூன்றாம் நிலையில் பேரம் பேசுவார்கள். கடவுளோடு, வாழ்க்கையோடு பேரங்கள் நடக்கும். “என் மகள் கல்யாணம் வரைக்கும் என்னை வாழவைத்துவிடு... எனக்கு குணமானால், உன்னுடைய திருத்தலத்திற்கு நடந்தே வருகிறேன்… எனக்கு குணமானால், எக்காரணத்தைக் கொண்டும் மது அருந்த மாட்டேன்… என் சொத்தையெல்லாம் எடுத்துக் கொள். எனக்கு நலம் தா”... என்ற பலவகை பேரங்கள் நிகழும் நிலை, மூன்றாம் நிலை.
நான்காம் நிலை - ஆழ்ந்த வருத்தத்தில் மூழ்குதல். எதிலும் பற்றற்ற, மனநிலை. எல்லாரையும், எல்லாவற்றையும் விட்டு விட்டு ஒதுங்கும் நிலை.
ஐந்தாம் நிலை - தன் சாவை, முடிவை ஏற்கும் நிலை. “சாவு நிச்சயம் என்பது தெரிந்து விட்டது. அதை எப்படி சந்திப்பது எனக் கற்றுக் கொள்ள ஆசைப்படுகிறேன்.” என்று சொல்லும் அளவுக்குப் பக்குவம் பெறுவது, இந்த இறுதி நிலையில் நடக்கும்.
Kübler-Ross அவர்கள், கூறியுள்ள இந்த ஐந்து நிலைகள், மரணத்தை எதிர்கொள்ளும் நோயாளிகளுக்கு மட்டுமே முதலில் பயன்பட்டது. ஆனால், வாழ்வின் பல்வேறு இழப்புகளிலும் இந்த நிலைகளை ஒவ்வொருவரும் உணர்கிறோம் என்று Kübler-Ross அவர்கள் கூறியுள்ளார். நமக்கு நெருங்கிய ஒருவர் இறக்கும்போது, அந்த இழப்பை முதலில் ஏற்க மறுக்கிறோம், பின்னர் கோபப்படுகிறோம்... இவ்விதம், அந்த இழப்பை ஏற்றுக் கொள்வதற்கு முன் வெவ்வேறு நிலைகளை கடக்க வேண்டியுள்ளது. இதேபோலவே, நம் வேலையை இழக்கும்போது, நமக்கு ஏற்படும் பொருள் இழப்பு அல்லது நம் நெருங்கிய உறவினர் அல்லது நண்பர் பிரிவது... என்று எல்லா இழப்புகளிலும் இந்த நிலைகளை நாம் உணர முடியும்.
இயேசு சிலுவையில் அத்தனை போராட்டங்களையும் தாண்டி 5ஆம் நிலையை அடைந்து தன் உயிரை நம்பிக்கையோடு இறைவனிடம் ஒப்படைத்தார். அவர் விண்ணகம் சென்றதை நான் இப்படி கற்பனை செய்து பார்க்கிறேன். வீட்டைத் திறந்து வைத்து, வாசலில் வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கும் ஒரு தாயை, தந்தையைச் சந்தித்து, அவர்கள் அணைப்பில் தன்னையே முழுவதும் கரைத்துக்கொள்ளும் குழந்தையைப் போல், இயேசு, தன் வானக வீட்டை அடைந்தார். "தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்" என்று மனதாரச் சொல்லி, உயிர் நீத்தார்.
சிலுவையில் அமைதியாய் உலகினின்று விடைபெற்ற இயேசுவிடம் நம் மன்றாட்டுக்களை எழுப்புவோம். வாழ்க்கையில் சந்திக்கும் பல இழப்புகளின்போது, அவற்றைச் சரியான வகையில் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் பெற வேண்டுமென்று மன்றாடுவோம். நமது இறுதி நேரம் வரும்போது நிறைவாக, அமைதியாக இவ்வுலகை விட்டு விடைபெற்றுச் செல்லும் விதமாக நம் வாழ்க்கை அமைய வேண்டுமென்றும் மன்றாடுவோம். சிலுவையில் அறையுண்டிருக்கும் இயேசுவின் காலடியில் அமர்ந்து, வாழ்க்கைக்குத் தேவையான இந்த முக்கியப் பாடங்களை, இந்தப் புனித வாரத்தில் கற்றுக் கொள்வோம்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |