2015-04-23 16:44:00

எத்தியோப்பிய இளையோர் கொல்லப்பட்டதற்கு ஆயர்கள் கண்டனம்


ஏப்.23,2015. தங்கள் மத நம்பிக்கையை விட்டுக் கொடுக்க விரும்பாத ஒரே காரணத்திற்காக, எத்தியோப்பிய இளையோர் 30 பேர், ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று எத்தியோப்பிய ஆயர்கள் கூறியுள்ளனர்.

எத்தியோப்பியாவிலிருந்து லிபியாவுக்கு பிழைப்புத் தேடிச் சென்ற கிறிஸ்தவ இளையோர் 30 பேரை, ISIS தீவிரவாதிகள் கொன்ற நிகழ்வு, ஒரு வீடியோத் தொகுப்பாக, ஏப்ரல் 19ம் தேதி வெளியானதற்குப் பதில் சொல்லும் வகையில், எத்தியோப்பிய ஆயர் பேரவை, தன் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

ஆயுதம் ஏதும் ஏந்தாமல், அரசியல், பொருளாதாரச் சக்தி ஏதும் இல்லாமல் இருந்த இளையோரை, அவர்களது மத நம்பிக்கை என்ற ஒரே காரணத்திற்காக, கொடூரமாகக் கொலை செய்தது, மனித குலத்திற்கே பெரும் அவமானம் என்று எத்தியோப்பிய ஆயர்கள் தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.

பல்வேறு மதத்தினரையும், கலாச்சரங்களைச் சேர்ந்தவர்களையும் வரவேற்று வாழவைக்கும் எத்தியோப்பியா நாட்டின் குடிமக்கள், இவ்வாறு கொல்லப்பட்டிருப்பது, ஏற்றுக்கொள்ளப்பட முடியாத அநீதி என்று ஆயர்கள் கூறியுள்ளனர்.

ISIS தீவிரவாதிகள், ஏப்ரல் 19 அன்று இந்தக் கொடூர வீடியோத் தொகுப்பை வெளியிட்டதற்கு அடுத்தநாள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எத்தியோப்பிய ஆர்த்தடாக்ஸ் சபை முதுபெரும் தந்தை, மத்தியாஸ் அவர்களுக்கு, தன் அனுதாபங்களையும், செபங்களையும் தெரிவித்து, செய்தியொன்றை அனுப்பினார்.

ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.