2015-04-25 15:08:00

உயிர்ப்புக்காலம் 4ம் ஞாயிறு - நல்லாயன் ஞாயிறு


'டைட்டானிக்' (Titanic) என்ற சொல்லைக் கேட்டதும், பிரம்மாண்டமான கப்பல் ஒன்று நம் மனக்கடலில் மிதந்து வரும். புகழ்பெற்ற அக்கப்பல், 1912ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 15ம் தேதி, அட்லான்டிக் கடல் நடுவே, பனிப்பாறையில் மோதி, கடலில் மூழ்கியது என்பதும் நம் நினைவில் பதிந்திருக்கும். "எதுவும் இந்தக் கப்பலை மூழ்கடிக்க முடியாது" என்ற ஆணவ அறிக்கையுடன் ஏப்ரல் மாதம் 10ம் தேதி புறப்பட்ட 'டைட்டானிக்', ஏப்ரல் மாதம் 15ம் தேதி இரு துண்டுகளாகப் பிளவுபட்டு, கடலில் மூழ்கியது. அக்கப்பல், மூழ்கி நூறாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. அக்கப்பலின் வீழ்ச்சி, மனித ஆணவத்திற்கு விழுந்த மரண அடி. ஆனால், 'டைட்டானிக்' மூழ்கும் நேரத்தில் நிகழ்ந்த வீரச் செயல்கள், மனிதத் தியாகத்தை உயர்த்திப் பிடிக்கும் ஒளி விளக்குகளாக இன்றும் நம் மனங்களுக்கு நிறைவு தருகின்றன. அந்த ஒளி விளக்குகளில் ஒன்று, Thomas Byles, Benedikt Peruschitz, Juozas Montvila, என்ற மூன்று அருள் பணியாளர்களைப் பற்றியது.

'டைட்டானிக்' மூழ்கிக்கொண்டிருந்தபோது, இம்மூன்று அருள் பணியாளர்களும் உயிர்காக்கும் படகுகளில் தப்பித்துச்செல்ல தங்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்புக்களை மறுத்துவிட்டனர். மரணத்தை எதிர்கொண்டிருந்த மக்களுக்கு ஒப்புரவு அருட்சாதனம் வழங்கியபடி, அம்மக்களுடன் இணைந்து செபித்தபடி, அவர்களும் கடலில் மூழ்கி இறந்தனர் என்று சொல்லப்படுகிறது. இந்த விபத்தில் இவர்களது பெயர்கள் பெரிதாகப் பேசப்படவில்லை; இவர்களது உடல்களும் மீட்கப்படவில்லை. ஆனால், இவர்களது இறுதிநேர ஆன்மீகப் பணிகளைக் கண்ட பலரும், அவர்கள் தலைமுறையினரும் இவர்களைப் பெருமையுடன், நன்றியுடன் இன்றும் எண்ணி வருகின்றனர். இன்று நாம் கொண்டாடும் நல்லாயன் ஞாயிறன்று, இவ்வருள் பணியாளர்களைப்பற்றி சிந்திப்பது பயனளிக்கும்.

ஆங்கிலிக்கன் சபையில் பிறந்த Thomas Byles அவர்கள், தன் 24வது வயதில் கத்தோலிக்கத் திருஅவையில் இணைந்து, 32வது வயதில் அருள் பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். தன்னைப்போல கத்தோலிக்கத் திருஅவையில் இணைந்த தன் தம்பியின் திருமணத் திருப்பலியை நிகழ்த்த, 42 வயதான அருள்பணி Byles அவர்கள், நியூ யார்க் நகர் நோக்கி பயணம் செய்தார். டைட்டானிக் கப்பல் மூழ்குவதற்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன்னதாக, ஏப்ரல் 14, ஞாயிறன்று, அருள்பணி Byles அவர்களும், அருள்பணி Peruschitz அவர்களும் கப்பலில் பயணித்த கத்தோலிக்கர்களுக்கு ஞாயிறு திருப்பலியை நிறைவேற்றினர்.

41 வயதான அருள்பணி Benedikt Peruschitz அவர்கள், புனித பெனடிக்ட் துறவுச் சபையைச் சேர்ந்தவர். இவர் அமெரிக்காவின் Minnesota  மாநிலத்தில் நிறுவப்பட்டிருந்த ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்க, கப்பலில் சென்று கொண்டிருந்தார்.

இம்மூன்று அருள் பணியாளர்களில் இளையவரான அருள்பணி Juozas Montvila அவர்கள், டைட்டானிக் கப்பலில் பயணித்தபோது, அவரது வயது 27. லித்துவேனியா நாட்டில் பிறந்த இவர், தன் 23வது வயதில் கீழைவழிபாட்டு முறை திருஅவையில் அருள் பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். இரஷ்ய அரசின் அடக்குமுறையால் நசுக்கப்பட்டிருந்த கத்தோலிக்கர்களுக்கு, இரகசியமாக அருள்பணி புரிந்த இவர், அமேரிக்கா சென்று, இன்னும் சற்று சுதந்திரமாக தன் அருள் பணிகளைத் தொடரும் நோக்கத்துடன் கப்பலில் புறப்பட்டார்.

இம்மூவரின் வாழ்விலும் நல்லாயன் இயேசுவின் பண்புகள் வெளிப்பட்டதை உணர்கிறோம். அச்சுறுத்தும் ஓநாய்கள் சூழ்ந்தாலும், தன் ஆடுகளுக்குத் தேவையான ஆன்மீக உதவிகள் செய்த அருள்பணி Montvila அவர்கள், வேற்றுநாட்டில் சுதந்திரமாகப் பணியாற்றலாம் என்ற எண்ணத்துடன் கப்பல் பயணம் மேற்கொண்டார்.

இளையோரை நல்வழிப்படுத்தும் நல்லெண்ணத்துடன், நாடுவிட்டு நாடு செல்ல, கடல் பயணம் மேற்கொண்டவர், அருள்பணி Peruschitz அவர்கள்.

இங்கிலாந்தின் Essex பகுதியில், St Helen என்ற கோவிலில், 10 ஆண்டுகளாக பங்குத்தந்தையாகப் பணியாற்றிவந்த அருள்பணி Byles அவர்கள், தன் தம்பியின் திருமணத்தை முன்னின்று நடத்தச் சென்று கொண்டிருந்தார்.

இவ்விதம், தங்களுக்கெனத் தனிப்பட்டத் திட்டங்களுடன் புறப்பட்ட இம்மூவரும், ஆபத்து சூழ்ந்த நேரத்தில், தங்கள் திட்டங்களைப் புறந்தள்ளிவிட்டு, இறைமக்களான ஆடுகளுக்காக தங்கள் உயிரையும் வழங்கத் துணிந்தனர்.

இம்மூவரையும் புனிதர்களாக உயர்த்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாலும், இம்மூவரும் மக்கள் மனங்களில் புனிதமான ஓரிடம் பெற்றுள்ளனர் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. திருத்தந்தை புனித 10ம் பயஸ் அவர்கள், அருள்பணி Byles அவர்களின் மரணத்தைப்பற்றி கேள்விப்பட்டபோது, அது ஒரு மறைசாட்சிய மரணம் என்று குறிப்பிட்டார். அருள்பணி Byles அவர்கள், பங்குத் தந்தையாகப் பணிபுரிந்து வந்த St Helen கோவிலில் இவர் நினைவாக வைக்கப்பட்டுள்ள ஒரு வண்ணக்கண்ணாடி சன்னலில் (stained-glass window) பொறிக்கப்பட்டுள்ள உருவம் என்ன தெரியுமா? நல்லாயனாம் இயேசுவின் உருவம்.

2012ம் ஆண்டு 'டைட்டானிக்' கப்பல் மூழ்கியதன் நூற்றாண்டு நினைவைக் கடைபிடித்தபோது, ஒரு சில மனிதரின் ஆணவம், 1500க்கும் மேற்பட்ட உயிர்களைப் பலிவாங்கியது என்ற எண்ணம், நம்மை மீண்டும் காயப்படுத்தியது. ஒவ்வொரு முறையும் நூற்றாண்டு நினைவுகள் கொண்டாடப்படும்போது, வரலாற்றுக் காயங்கள் மீண்டும் திறக்கப்படுகின்றன என்பதை மறுப்பதற்கில்லை. 2014ம் ஆண்டு, முதல் உலகப்போர் துவங்கியதன் நூற்றாண்டு நினைவு கடைபிடிக்கப்பட்டது. நான்கு ஆண்டுகள் நடைபெற்ற இந்த உலகப் போரின் இரத்தம் நிறைந்த வரலாற்றின் நூற்றாண்டு நினைவுகள், 2018ம் ஆண்டு முடிய அவ்வப்போது கடைபிடிக்கப்படும்.

இவ்வாண்டு, ஏப்ரல் 23, 24 தேதிகளில் ஆர்மேனியாவின் தலைநகர், Yerevanல் ஆட்டமோன் (Ottomon) அரசால் கொல்லப்பட்ட 15 இலட்சம் ஆர்மேனியர்களைப் புனிதர்களாக அறிவித்து, அவர்கள் நினைவு சிறப்பிக்கப்பட்டது. முதல் உலகப்போரில் அதிக அளவு உயிர்களைப் பறித்த மோதல், துருக்கி நாட்டின் Gallipoli வளைகுடாவில் நடைபெற்றது என்று சொல்லப்படுகிறது. 1,31,000 வீரர்கள் கொல்லப்பட்ட அந்நிகழ்வின் நூற்றாண்டு நினைவு, ஏப்ரல் 24, இவ்வெள்ளியன்று கடைபிடிக்கப்பட்டது.

இந்த நினைவுகள் கடைபிடிக்கப்பட்டபோது, பல அரசியல் விவாதங்களும், வரலாற்றுக் காயங்களும் மீண்டும் திறக்கப்பட்டன. இலட்சக்கணக்கில் நிகழ்ந்த இந்த உயிர்ப்பலிகள், வரலாற்றுப் புள்ளிவிவரங்களாக, அரசியல் வாக்குவாதங்களுக்கு துணைபோகும் குறிப்புக்களாக மட்டுமே இன்று நம்மிடையே பயன்படுகின்றன. இந்த உயிர்ப்பலிகளுக்குக் காரணமாக இருந்த தலைவர்கள் யாரும் இந்த மனித வேட்டையில் உயிரிழந்ததாக வரலாறு சொல்லவில்லை.

தன்னலம், பேராசை, பழிவாங்கும் வெறி ஆகியத் தனிமனிதத் தீமைகளுக்குக் ‘கொள்கை’ என்ற சாயம் பூசி, அக்கொள்கைகளுக்காக, மக்களைப் பலி கொடுக்கும் தலைவர்கள், மனித வரலாற்றின் பக்கங்களை அன்றும், இன்றும் நிரப்பி வருகின்றனர். இத்தகையத் தலைவர்களை, 'கூலிக்கு மேய்ப்பவர்' என்று இன்றைய நற்செய்தியில் இயேசு குறிப்பிடுகிறார். "நல்ல ஆயர், ஆடுகளுக்காக தம் உயிரைக் கொடுப்பார்... கூலிக்கு மேய்ப்பவர், ஆடுகளை விட்டுவிட்டு ஓடிப்போவார்" (யோவான் 10: 11-12) என்று இயேசு கூறியதையும் தாண்டி, நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது இன்றைய நிலை. ஆடுகளுக்காக உயிரைக் கொடுப்பவர் நல்ல ஆயர் என்று இயேசு கூறியதற்கு நேர் எதிர் துருவமாக, ஆடுகளின் உயிர்களை எடுக்கும் போலி ஆயர்கள் பெருகியுள்ளது இன்று நாம் சந்திக்கும் ஆபத்து.

சுட்டுவிரல் கொண்டு மற்றவரைச் சுட்டிப் பேசும்போது எழும் வழக்கமான நெருடல் இப்போதும் நமக்குள் எழுகிறது. பதவி வெறி பிடித்த அரசுத் தலைவர்களையும், குறிப்பாக, இன்றைய நாட்களில், மத வெறி பிடித்த மதத் தலைவர்களையும், போலி மேய்ப்பர்கள் என்று சுட்டிக்காட்டிவிட்டு நாம் தப்பித்துக்கொள்ள முடியாது. இந்தப் போலி ஆயர்கள் அனைவரும் வானத்திலிருந்து குதிக்கவில்லை; மாறாக, ஏதோ ஒரு குடும்பத்தில் பிறந்து, பள்ளியில் பயின்று, ஒரு சமுதாயத்தால் வளர்க்கப்பட்டவர்கள் என்ற உண்மை, கூரிய விரல்களாக நம்மைக் குத்திக்காட்டுகின்றது.

நம்மைக் குத்தும் விரல்களை ஓர் ஆன்ம ஆய்வாக மேற்கொண்டால், நம் குடும்பங்கள், பள்ளிகள், சமுதாயம் என்ற அனைத்து நிலைகளிலும், 'நல்ல ஆயர்களும்', 'கூலிக்கு மேய்ப்பவர்களும்' வழிகாட்டிகளாக இருப்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். 'கூலிக்கு மேய்ப்பவர்களின்' கூட்டம் அதிகமானால், அடுத்தத் தலைமுறை எவ்விதம் வழிகாட்டப்படும் என்பதை எண்ணிப் பார்க்கவே மனம் அஞ்சுகிறது.

பத்து நாட்களுக்கு முன் (ஏப்ரல் 16, 2015), உலக ஊடகங்களில், குறிப்பாக, facebook, twitter, YouTube (Young Kurdish YPG Girl Use PKM – YouTube) போன்ற சமுதாய வலைத்தளங்கள் வழியே பகிரப்பட்டு வரும் ஒரு வீடியோச் செய்தி, அதிர்ச்சியில் என்னை உறையவைத்தது. ஈராக் நாட்டின் குர்திஷ் (Kurdish) இனத்தைச் சேர்ந்த 6 அல்லது 7 வயதே நிறைந்த ஒரு சிறுமி, ஏதோ ஒரு பாலை நிலத்தில் எதையோ பார்த்து துப்பாக்கியால் சுட்டுக் கொண்டிருக்கிறாள். அவள் பயன்படுத்துவது விளையாட்டுத் துப்பாக்கி அல்ல, தொடர்ச்சியாக பல குண்டுகளைச் சுடும் உண்மையான 'மஷின் துப்பாக்கி' அது. இந்த வீடியோவைப் படமாக்கியவர், அச்சிறுமியின் தந்தை என்பது ஊடகங்களின் கணிப்பு. வீடியோ காமிராவை இயக்கிக் கொண்டிருந்த அவர், சிறுமியிடம், "நீ இன்று எத்தனை ISIS தீவிரவாதிகளைக் கொன்றாய்?" என்று கேட்க, அச்சிறுமி காமிரா பக்கம் திரும்பி, தன் பிஞ்சு விரல்களை நீட்டி, கள்ளம் கபடமற்ற ஒரு புன்னகையுடன், "400 பேர்" என்று கூறுகிறாள். தொடர்ந்து அச்சிறுமியிடம், "கொல், அவர்களைக் கொல்" என்று அக்குரல் கூற, சிறுமியும் தொடர்ந்து சுடுகிறாள்.

மனதை அதிரவைக்கும் இந்த வீடியோ, இன்றைய உலகின் வன்முறைகளுக்கு ஏதோ ஒருவகையில் பதில் தருகிறது. பிஞ்சு மனங்களில் வெறுப்பு என்ற நஞ்சைக் கலந்து ஊட்டுவது குழந்தைகளுக்கு மிக நெருங்கியவர்களான பெற்றோரும், உற்றாரும் என்ற உண்மை, நம் அனைவரையும் குற்ற உணர்வோடு தலைகுனியச் செய்கிறது. நல்லாயன் ஞாயிறைக் கொண்டாடும் இன்று, நாம் ஒவ்வொருவரும் நாம் வாழும் சூழல்களில் மற்றவர்களை நல்வழியில் நடத்தும் வழிகாட்டிகளாக, நல்ல ஆயர்களாக வாழ்கிறோமா என்ற ஆன்மத் தேடலை மேற்கொள்வோம்.

நல்லாயன் ஞாயிறன்று, இறையழைத்தலுக்காக செபிக்கும் உலக நாளையும் திருஅவை அறிவித்துள்ளது. ஏப்ரல் 26ம் தேதி நாம் கொண்டாடும் இந்த 52வது உலக நாளுக்கென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், "நம் சுயநலத்திலிருந்து வெளியேறிச் செல்வதே, நம் அனைவருக்கும் தரப்பட்டுள்ள முக்கியமான மறைபோதகப் பணி" என்று கூறியுள்ளார். சுயநலம் என்ற சுழல்காற்றில் சிக்கி இவ்வுலகம் சின்னாபின்னமாகி வருவதை நாம் அறிவோம். சுயநலம் அற்ற தலைவர்கள் நம் குடும்பங்களில் உருவாகின்றனர் என்பதை உறுதிசெய்தால், இவ்வுலகின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என்பதும் உறுதி.

நல்லாயன், இறையழைத்தல் என்ற இரு எண்ணங்களையும் இணைக்கும் ஓர் உண்மைச் சம்பவம் இது. கொரியாவில் நடந்துவந்த போரின் உச்சக்கட்டம். போரில் காயப்பட்டு, உயிருக்குப் போராடிவந்த ஒரு வீரர், இறப்பதற்கு முன், ஓர் அருள்பணியாளரைச் சந்திக்க வேண்டுமென்ற தன் ஆவலை வெளியிட்டார். அவருக்கு மருத்துவ உதவிகள் செய்தவர் திகைத்தார். இந்தப் போர்க்களத்தில் அருள்பணியாளருக்கு எங்கே போவது? என்று அவர் தடுமாறிக் கொண்டிருந்தபோது, அந்த வீரருக்கு அருகில் மரணத்துடன் போராடிக் கொண்டிருந்த மற்றொரு வீரர், "நான் ஓர் அருள்பணியாளரை்" என்று தன்னையே அறிமுகப்படுத்தினார். அவரது நிலையைக் கண்ட மருத்துவர், "நீங்கள் அசையாதீர்கள். அசைந்தால், உங்கள் உயிருக்குப் பெரும் ஆபத்து." என்று அந்த அருள்பணியாளரிடம் எச்சரித்தார். அதற்கு அந்த அருள்பணியாளர், "நான் வாழப்போகும் இந்த ஒரு சில மணித்துளிகளை விட, என் நண்பரின் ஆன்மா மிகவும் முக்கியம்" என்று சொன்னபடி, தன்னிடம் எஞ்சியிருந்த சக்தியை எல்லாம் திரட்டி, தரையோடு தரையாக ஊர்ந்து வந்தார். சாகும் நிலையில் இருந்த அந்த வீரரின் இறுதி நேரத்தில் அவருக்கு ஒப்புரவு அருட்சாதனத்தை வழங்கினார். அந்த வீரரும், அருள்பணியாளரும் அமைதியாக இறந்தனர்.

ஏப்ரல், மே மாதங்கள்... முக்கியமான முடிவுகள் எடுக்கும் நேரம். பள்ளிப்படிப்பு, கல்லூரி படிப்பு ஆகியவற்றை முடித்துவிட்டு, வாழ்வில் சில முக்கிய முடிவுகளை எடுக்கக் காத்திருக்கும் இளையோரை இன்று சிறப்பாக இறைவனின் திருப்பாதம் கொணர்வோம். நல்லாயனாம் இயேசுவின் அழைத்தலை ஏற்று, மக்கள் பணிக்குத் தங்களையே அளிக்க முன்வரும் இளையோரை, இறைவன் வழிநடத்த வேண்டுமென்று, நல்லாயன் ஞாயிறன்று, இறையழைத்தல் ஞாயிறன்று மன்றாடுவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.