2015-04-25 15:28:00

பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்து திருத்தந்தை அஞ்சவில்லை


ஏப்.25,2015. இத்தாலியில் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ள பயங்கரவாதக் கும்பலைச் சேர்ந்தவர்கள் வத்திக்கானைத் தாக்குவதற்குத் திட்டமிட்டிருந்தனர் என்று கூறப்படும்வேளையில், இச்செய்திகளுக்கு மத்தியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அச்சமின்றி அமைதியாக உள்ளார் என்று கூறினார் கர்தினால் பியெத்ரோ பரோலின்.

சர்தீனியாவிலிருந்து செயல்படும் அல் கெய்தாவுடன் தொடர்புடைய பயங்கரவாதக் கும்பலைச் சேர்ந்த ஒன்பது பேர் இத்தாலியில் கைது செய்யப்பட்டுள்ளனர். இப்பயங்கரவாதிகள், 2010ம் ஆண்டு மார்ச் மாதத்தில் வத்திக்கானைத் தாக்கத் திட்டமிட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இத்தாலிய அதிகாரிகளுக்கு இது அச்சத்தை ஏற்படுத்தியிருப்பது சரியானதாக இருந்தாலும், இது குறித்து அதிகமாக கவலைப்பட தேவையில்லை, ஆயினும், நாம் நிச்சயம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கூறினார் கர்தினால் பரோலின்.

இவ்வெள்ளியன்று பதுவா நகரில் Triveneto இறையியல் துறையைத் தொடங்கி வைத்து உரையாற்றிய கர்தினால் பரோலின் அவர்கள், பயங்கரவாதம், ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு, கியூபா, ஆர்மேனிய இனப்படுகொலை, தீவிரவாத அச்சுறுத்தல் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்த திருத்தந்தையின் எண்ணங்களையும், திட்டங்களையும் பகிர்ந்துகொண்டார்.

ஆசியத் திருத்தூதுப் பயணங்களையடுத்து, ஆப்ரிக்காவுக்கு, குறிப்பாக போரினாலும், பிற நெருக்கடிகளாலும் பாதிக்கப்பட்டுள்ள ஆப்ரிக்க நாடுகளுக்குத் திருத்தூதுப் பயணங்களை மேற்கொள்வது குறித்து திருத்தந்தை திட்டமிட்டு வருகிறார் என்றும் தெரிவித்தார் கர்தினால் பரோலின்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.