2015-04-25 15:23:00

போர்கள், அமைதிக்காக மேலும் உழைக்க நம்மைத் தூண்டுகின்றன


ஏப்.25,2015. இன்றைய உலகில் இடம்பெறும் பல வன்முறைகளும், பல சண்டைகளும் நம்மை மிகவும் கவலையடையச் செய்கின்றன, ஆயினும், கடந்த உலகப் போரின் நினைவுகள், மக்களிடையே அமைதியும், நல்லிணக்கமும் ஏற்பட நாம் எல்லாரும் ஒன்றிணைந்து உழைக்க உந்தித் தள்ளுகின்றன என்று திருப்பீடச் செயலர் கூறினார்

வெனிஸ் நகரப் பாதுகாவலரான புனித மாற்கின் விழாவாகிய இச்சனிக்கிழமையன்று வெனிஸ் புனித மாற்கு பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றிய கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், அம்மக்களுக்குத் திருத்தந்தையின் வாழ்த்தையும், ஆசிரையும் தெரிவித்தார்.

மதம், இனம் அல்லது கருத்தின் அடிப்படையில் இடம்பெறும் பாகுபாடுகளும் அடக்குமுறைகளும் கடந்த கால நிகழ்வு மட்டுமல்ல, துரதிஷ்டவசமாக, அவை இந்த நம் காலத்திலும் இடம்பெறுகின்றன என்றும் கூறினார் கர்தினால் பரோலின்.

இத்தாலியில் இரண்டாம் உலகப் போர் முடிவடைந்ததன் எழுபதாம் ஆண்டையும்,  1943ம் ஆண்டு செப்டம்பருக்கும் 1945ம் ஆண்டு ஏப்ரலுக்கும் இடைப்பட்ட காலத்தில் நடந்த சகோதரத்துவக் கொலைகளையும் நினைவுகூர்ந்த கர்தினால், கடந்த எழுபது ஆண்டுகளில் இறைவன் இத்தாலிக்கு அமைதி அருளியதற்கு நன்றியும் தெரிவித்தார்.

இன்று கிறிஸ்தவ விசுவாசத்துக்காகப் பலர் கொல்லப்படுகின்றனர், மதங்களையும், கருத்துக்கோட்பாடுகளையும் தவறாகப் பயன்படுத்தவோர் குறித்து நாம் விழிப்புடன் இருக்க வேண்டுமென்றும் கூறினார் கர்தினால் பரோலின்.

வெனிஸ் நகரப் பாதுகாவலரான புனித மாற்கின் கல்லறை புனித மாற்கு பேராலயத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.