2015-05-23 16:10:00

பல உயிரினங்களின் வாழ்வு, வறுமை ஒழிப்புக்கு இன்றியமையாதது


மே,23,2015. இப்பூமியில் பல்வேறு உயிரினங்களின் வாழ்வு, தற்போதைய மற்றும் வருங்காலத் தலைமுறைகளின் நல்வாழ்வுக்கு மிகவும் இன்றியமையாதது என்பதால், உலகில் அழிவின் அச்சுறுத்தலை எதிர்நோக்கும் பல்வேறு உயிரினங்களைக் காப்பாற்றுவதற்கு உலகினர் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுள்ளார் ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன்.

உலகின் நிலையான வளர்ச்சிக்கு பல்வகை உயிரினங்கள் என்ற தலைப்பில் இவ்வெள்ளியன்று உலக பல்வகை உயிரினங்கள் தினம் கடைப்பிடிக்கப்பட்டபோது இவ்வாறு அழைப்பு விடுத்த பான் கி மூன் அவர்கள், உலகில் கடும் ஏழ்மையையும் பசியையும் அகற்றுவதற்கு சுற்றுச்சூழல் அமைப்புகளையும், பல்வேறு உயிரினங்களையும் பாதுகாக்க வேண்டும் என்று கூறினார்.

2015ம் ஆண்டுக்குப் பின்னான வளர்ச்சித் திட்டங்கள் குறித்த விவாதங்கள் நடைபெற்றுவரும் இந்நாள்களில், இந்த வளர்ச்சித் திட்டங்கள் பல்வகை உயிரினங்களைப் பாதுகாக்க உதவும் என்றும் கூறினார் பான் கி மூன். 

ஆண்டுதோறும் மே 22ம் தேதி  உலக பல்வகை உயிரினங்கள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.