2015-06-09 15:56:00

உலகப் பெருங்கடல்கள் தினம், ஜூன்,08


ஜூன்,09,2015. இவ்வாண்டில் பாரிசில் நடைபெறவிருக்கும் அனைத்துலக மாநாட்டில் காலநிலை மாற்றம் மற்றும் வறுமையை ஒழிப்பது குறித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தங்களைக் கொண்டுவருவதற்கு முயற்சிக்கும் அரசுகள், உலகின் பெருங்கடல்களின் சிறப்பு குறித்தும் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுள்ளார் பான் கி மூன்.

ஜூன்,08, இத்திங்களன்று சிறப்பிக்கப்பட்ட உலகப் பெருங்கடல்கள் தினத்திற்கென வெளியிட்டுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ள ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அவர்கள், இவ்வுலக தினத்தில், பெருங்கடல்களைப் பாதுகாத்துப் பேணுவது குறித்த உலகினரின் அர்ப்பணம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று கேட்டுள்ளார்.

உலகில் ஐந்து பேருக்கு ஒருவர் வீதம் கடற்கரை அருகிலும், ஏழு பேருக்கு மூவர் வீதம் கடல் வளங்களை நம்பியும் வாழ்கின்றனர், பெருங்கடல்கள் காலநிலையை ஒழுங்குபடுத்துகின்றன, அவற்றிலுள்ள இயற்கை வளங்கள், உணவுப் பொருள்கள், வேலை வாய்ப்புகள் என பல வழிகளில் கோடிக்கணக்கணக்கான மக்கள் பெருங்கடல்களால் பயனடைகின்றனர் என்றும் கூறியுள்ளார் பான் கி மூன்.

வறுமைக்கு எதிரான உலகளாவிய நடவடிக்கைகளுக்கென அடுத்த 15 ஆண்டுகளுக்குத் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன, ஐ.நா.வின் உறுதியான வளர்ச்சித் திட்ட இலக்குகளை நிறைவேற்றுவதற்கு பெருங்கடல்கள் மிகவும் முக்கியமானவை என்றும் அச்செய்தி கூறுகின்றது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.