2015-07-01 16:53:00

அமெரிக்க திருப்பயணம் ஆழமான நேர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தும்


ஜூலை,01,2015. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு மேற்கொள்ளவிருக்கும் திருத்தூதுப் பயணம், அந்நாடு மீது மிக ஆழமான நேர்மறைத் தாக்கங்களை ஏற்படுத்தும் என்று அந்நாட்டு ஆயர்கள் தெரிவித்தனர்.

வருகிற செப்டம்பர் 19ம் தேதி முதல் 28ம் தேதி வரை, கியூபா, அமெரிக்க ஐக்கிய நாடு, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் தலைமையகம் ஆகியவற்றுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளவிருக்கும் திருத்தூதுப் பயணம் பற்றிய விபரங்களைத் திருப்பீடம் இச்செவ்வாயன்று வெளியிட்டது.

 

இதை முன்னிட்டு கருத்து தெரிவித்த அமெரிக்க ஐக்கிய நாட்டு நியுயார்க் கர்தினால் திமோத்தி டோலன் அவர்கள், இத்திருத்தூதுப் பயணம், நம் ஆன்மீகத் தந்தையின் பயணமாக இருக்கும், அனைத்து மக்களிடம் மிக ஆழமான மற்றும் நிலைத்த நேர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் முதலில் கியூபா சென்று, பின்னர் அமெரிக்க ஐக்கிய நாட்டின் வாஷிங்க்டன், நியுயார்க், பிலடெல்பியா ஆகிய மூன்று நகரங்களில் திருத்தூதுப் பயண நிகழ்வுகளை நிறைவேற்றுவார்.

அமெரிக்க அரசுத்தலைவர் ஒபாமா அவர்களைச் சந்தித்தல், அமெரிக்க காங்கிரஸ் அவையில், ஐ.நா. தலைமையகத்தில் உரையாற்றுதல், அமெரிக்க ஐக்கிய நாட்டின் 300க்கும் மேற்பட்ட ஆயர்களுக்கு உரையாற்றுதல், 8வது உலக குடும்பங்கள் மாநாட்டில் கலந்துகொள்தல் என, பல்வேறு நிகழ்வுகள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இப்பயணத்தில் இடம்பெற்றுள்ளன. 

ஆதாரம் : CNA / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.