2015-07-27 15:40:00

கிராக்கோவ் உலக இளையோர் தினத்திற்குப் பதிவு


ஜூலை,27,2015. போலந்து நாட்டின் கிராக்கோவ் நகரில் நடைபெறவிருக்கும் 31வது உலக கத்தோலிக்க இளையோர் தினத்திற்கான அதிகாரப்பூர்வப் பதிவை இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் தொடங்கி வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னிடம் கொடுக்கப்பட்ட tabletல் ஆன்லைன் பதிவைத் ஆரம்பித்து வைத்தார். ஓர் இளம்பெண், ஓர் இளைஞர் ஆகிய இருவருடன் சேர்ந்து இப்பதிவைத் தொடங்கி வைத்தார் திருத்தந்தை.

இந்த எலெக்ட்ரானிக் இணையதள வசதி வழியாக உலக இளையோர் தினத் திருப்பயணியாகப் பெயரைப் பதிவு செய்கிறேன், இரக்கத்தின் ஜூபிலி ஆண்டில் சிறப்பிக்கப்படும் இந்த இளையோர் தினம், ஒரு வகையில், இளையோரின் ஜூபிலியாக இருக்கும் என்றும் கூறினார் திருத்தந்தை.

இரக்கமுடையோர் பேறுபெற்றோர், ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவோர் என்ற தலைப்புப் பற்றி சிந்திப்பதற்கு இத்தினம் அழைப்பு விடுக்கின்றது, போலந்துக்குச் செல்வதன் வழியாக அல்லது தங்களின் இடங்களில் இந்த இளையோர் தினத்தில் கலந்துகொள்வதற்கு அனைவருக்கும் அழைப்பு விடுப்பதாகவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

31வது உலக கத்தோலிக்க இளையோர் தினம், கிராக்கோவ் நகரில் 2016ம் ஆண்டு ஜூலை 26 முதல் 31 வரை நடைபெறும். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.