2015-07-28 15:04:00

இளையோர் நண்பர்களே, திருமணம் செய்துகொள்ள அஞ்ச வேண்டாம்


ஜூலை,28,2015. “அன்பு இளையோர் நண்பர்களே, திருமணம் செய்து கொள்வதற்கு அஞ்ச வேண்டாம், தம்மோடு ஒன்றித்திருக்கும் திருமணமான எல்லாத் தம்பதியர்களுடன் கிறிஸ்து தம் அருளோடு உடன் இருக்கிறார்”என்ற வார்த்தைகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது டுவிட்டர் செய்தியாக இச்செவ்வாயன்று வெளியிட்டுள்ளார்.

மேலும், போலந்து நாட்டின் கிராக்கோவ் நகரில் நடைபெறவிருக்கும் 31வது உலக கத்தோலிக்க இளையோர் தினத்திற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது பெயரை  ஆன்லைனில் பதிவு செய்த ஒரு நாளுக்குள், அத்தினத்தில் கலந்துகொள்வதற்குப் பதிவு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை உச்சத்திற்குச் சென்றுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் இணையதளம் மூலம் தனது பெயரைப் பதிவு செய்த ஒரு நாளுக்குள், 45 ஆயிரத்திற்கு மேற்பட்ட திருப்பயணிகள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர்.

இரக்கமுடையோர் பேறுபெற்றோர், ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவோர் என்ற தலைப்பில், 2016ம் ஆண்டு ஜூலை 26 முதல் 31 வரை, கிராக்கோவ் நகரில் 31வது உலக கத்தோலிக்க இளையோர் தினம் நடைபெறும். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இதில் கலந்து கொள்வார்.

சிலுவைப்பாதை பக்தி முயற்சி, மறைக்கல்வி, இளையோர் விழாக்கள் என பல்வேறு நிகழ்வுகள் இதில் இடம்பெறும்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.