2015-08-06 16:18:00

அதிலாபாத் சீரோ மலபார் மறைமாவட்டத்தின் புதிய ஆயர்


ஆக.06,2015. இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில், அதிலாபாத் (Adilabad) சீரோ மலபார் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, அருள்பணி அன்டனி பிரின்ஸ் பானேங்காடன் (Antony Prince Panengaden) அவர்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழனன்று நியமித்துள்ளார்.

அதிலாபாத் மறைமாவட்டத்தின் ஆயராக பணியாற்றிவந்த ஜோசப் குன்னத் (Joseph Kunnath) அவர்கள் பணிஓய்வு பெறுவதை ஏற்றுக்கொண்ட திருத்தந்தை, புதிய ஆயரை நியமித்துள்ளார்.

புதிய ஆயராகப் பணியேற்கவிருக்கும் அருள்பணி பானேங்காடன் அவர்கள், 1976ம் ஆண்டு, கேரளாவின் திருச்சூரில் பிறந்து, கார்மேல் துறவு சபையில் இணைந்தார்.

2007ம் ஆண்டு குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்ட அருள்பணி பானேங்காடன் அவர்கள், உரோம் நகரில் உர்பானியா பாப்பிறைப் பல்கலைக் கழகத்தில் விவிலிய இறையியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

மேலும், இவ்வியாழனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கனடா நாட்டில் வாழும் சீரோ மலபார் கத்தோலிக்கர்களுக்கென டொரான்டோ (Toronto) நகரில், ஒரு புதிய அதிகார வட்டத்தை உருவாக்கி, அதற்கு, அருள்பணி ஜோஸ் கல்லுவேளில் (Jose Kalluvelil) அவர்களை அப்போஸ்தலிக்க நிர்வாகியாக நியமித்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.