2015-08-06 16:52:00

சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கென தனிப்பட்ட பணிக்குழு


ஆக.06,2015. சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கென தனிப்பட்டப் பணிக்குழுவை உருவாக்கும் தீர்மானத்தை, பிலிப்பின்ஸ் நாட்டில் பணியாற்றும் அனைத்து துறவு சபைகளும், அண்மையில் நிறைவேற்றின.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சுற்றுச்சூழலை மையப்படுத்தி அண்மையில் வெளியிட்ட "இறைவா உமக்கே புகழ்" என்ற திருமடலின் பொருளை ஆழமாகக் கற்றுக்கொள்வதும், அத்திருமடல் வழியே திருத்தந்தை விடுக்கும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதும் இந்தப் பணிக்குழுவின் முக்கியப் பணி என்று துறவு சபைகள் அறிவித்துள்ளன.

காலநிலை மாற்றத்தை மனதில் கொண்டு செயலாற்றும் பல்வேறு சமுதாய அமைப்புக்களுடன், இந்தப் பணிக்குழு இணைந்து உழைக்கும் என்றும் துறவு சபையினர் கூறியுள்ளனர்.

காலநிலை மாற்றத்தையொட்டிய பணிக்குழு ஒன்றை அமைக்கும் முயற்சியில் ஆசிய ஆயர் பேரவையும் ஈடுபட்டுள்ளதென்று, ஆசிய ஆயர் பேரவையின் அறிக்கையொன்று கூறுகிறது.

86 மறைமாவட்டங்களைக் கொண்ட பிலிப்பின்ஸ் நாட்டில், 12,000த்திற்கும் அதிகமான அருள் சகோதரிகளும், 7335 அருள்பணியாளர்களும் பணியாற்றிவருவதாக, பிலிப்பின்ஸ் ஆயர் பேரவையின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.