2015-08-06 16:42:00

ஹிரோஷிமா, நாகசாகியில் ஆயர்களின் செப முயற்சிகள்


ஆக.06,2015. ஆகஸ்ட் 6, இவ்வியாழனன்று ஹிரோஷிமா நகரில் அமைந்துள்ள உலக அமைதி பேராலயத்தில், கத்தோலிக்க ஆயர்களும், ஆங்கிலிக்கன் ஆயர்களும் இணைந்து பத்துநாள் கிறிஸ்தவ ஒன்றிப்பு செப முயற்சிகளைத் துவக்கி வைத்தனர்.

ஆகஸ்ட் 9, வருகிற ஞாயிறன்று, நாகசாகி நகரில் 100க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் நினைவுக் கூடம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய இருநாடுகளில் அமெரிக்க ஐக்கிய நாடு மேற்கொண்ட அணுகுண்டு தாக்குதலின் 70ம் ஆண்டு நினைவாக, இவ்வியாழன் காலை 8.15 மணிக்கு, 40,000த்திற்கும் அதிகமானோர் ஹிரோஷிமா அமைதி நினைவு பூங்காவில் கூடி, அமைதி அஞ்சலி செலுத்தினர்.

ஹிரோஷிமா நகரை அணுகுண்டு தாக்கிய நேரமான, காலை 8.15 மணிக்கு, அமைதி மணி ஒவ்வோர் ஆண்டும் ஒலிக்கப்படுகிறது. அவ்வேளையில், ஹிரோஷிமா நகரின் மேயர், அணுகுண்டின் விளைவுகளைச் சந்தித்து உயிர் வாழ்ந்தோரில், கடந்த ஆண்டு இறந்தோரின் பட்டியலை வாசிப்பார்.

ஆகஸ்ட் 6ம் தேதி ஹிரோஷிமாவிலும், 9ம் தேதி நாகசாகியிலும் வீசப்பட்ட அணுகுண்டுகளால், 1,40,000த்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். தொடர்ந்த ஆண்டுகளில் அணுகுண்டின் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டோர் இறந்து வருகின்றனர்.

அணுகுண்டு தாக்குதலின் 70ம் ஆண்டு நிறைவு வேளையில், இதன் விளைவுகளைத் தாங்கி உயிர் வாழ்வோரின் எண்ணிக்கை ஏறத்தாழ 1,90,000 என்றும், இவர்களின் சராசரி வயது, 79.44 வருடங்கள் என்றும் ஆசிய செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.