2015-08-31 16:28:00

இலங்கையில் காணாமல் போனவர்கள் : அனைத்துலக விசாரணையே வேண்டும்


ஆக.31,2015. இலங்கையில் போர்க்காலத்தில் காணாமல்போனவர்களின் உறவினர்கள் மன்னார் நகரில் இந்த ஞாயிறன்று கூடி, தங்களின் உறவுகளை கண்டுபிடிப்பதற்கு அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரியுள்ளனர்.

மனிதர்கள் காணாமல் ஆக்கப்படுதலுக்கு எதிரான அனைத்துலக தினத்தையொட்டி இந்த நிகழ்வு மன்னார் குடிமக்கள் குழுவின் தலைவர் அருள்பணி ஜெபமாலையின் தலைமையில் நடைபெற்றது.

வடக்கு-கிழக்கு மாநிலங்களில் காணாமல் போனோர் குடும்பங்களின் சங்கத்தினரும், மன்னார் குடிமக்கள் குழுவினரும் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.

காணாமல்போனவர்கள் தொடர்பில் உள்நாட்டில் பல்வேறு விசாரணைகள் நடத்தப்பட்டு, சாட்சியங்கள் அளிக்கப்பட்டுள்ளபோதிலும் இலங்கை அரசால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று அந்த அமைப்புகள் கூறியுள்ளன.

காணாமல் ஆக்கப்பட்வர்கள் எவ்வாறு காணாமல் போயுள்ளனர் என்பது குறித்த ஆவணங்கள், அனைத்துலக நிறுவனங்களிடம் வழங்கப்பட்டுள்ள போதிலும், அவற்றால் பயனேதும் ஏற்படவில்லை என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படவில்லை என்றும் உறவினர்கள் கூறுகின்றனர்.

இதன் காரணமாகவே அனைத்துலக விசாரணை ஒன்றை தாங்கள் வலியுறுத்துவதாக இந்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான அருள்பணி ஜெபமாலை அவர்கள் தெரிவித்தார்.

ஆதாரம் : BBC / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.