2015-10-19 16:10:00

சீரோ மலங்கரா திருஅவை ஒன்றிப்பை ஏற்படுத்தும் பாலம்


அக்.19,2015.  ஒவ்வோர் உண்மையான மேய்ப்பரும், மனிதரை இறைவனிடமும், கடந்த காலத்தை எதிர்காலத்திற்கும், உள்ளூர் சமூகத்தை கிறிஸ்துவின் உடலுக்கும் இட்டுச் செல்லும் பாலமாக இருக்கிறார் என்று, கீழை வழிபாட்டுமுறை திருஅவைகள் பேராயத் தலைவர் கர்தினால் லெயோனார்தோ சாந்திரி அவர்கள் கூறினார்.

இந்தியாவின் சீரோ மலங்கரா திருஅவையின் முன்னாள் தலைவர் பேராயர் பெனடிக்ட் மார் கிரகோரியோஸ் அவர்கள் பிறந்ததன் நூறாம் ஆண்டை முன்னிட்டு உரோம் உர்பானியானம் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு அனுப்பிய செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார் கர்தினால் சாந்திரி.

பேராயர் கிரகோரியோஸ் அவர்கள், கிறிஸ்தவ ஒன்றிப்பு இயக்கத்திற்குப் பரிந்துபேசுபவராகவும், மக்கள் கிறிஸ்துவிடம் வருவதற்கு கல்வியை ஊக்குவித்தவராகவும் அறியப்படுகிறார் என்றும் கூறியுள்ளார் கர்தினால் சாந்திரி.

இயற்கையை அன்புகூர்பவராகவும், ஏழைகளின் பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்றுபவராகவும் வாழ்ந்துள்ள பேராயர் கிரகோரியோஸ் அவர்கள், இக்காலத்தில் அதிகமாகத் தேவைப்படும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் நாம் அனைவரும் ஈடுபடுவதற்குத் தூண்டுபவராகவும் உள்ளார் என்றும் தனது செய்தியில் கூறியுள்ளார் கர்தினால் சாந்திரி.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.