2015-11-24 15:30:00

யூபிலி ஆண்டில் இத்தாலியில் பாதுகாப்பு உச்சத்தில் இருக்கும்


நவ.24,2015. வருகிற டிசம்பர் 8ம் தேதி தொடங்கும் இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில் வத்திக்கான் தூய பேதுரு வளாகம் மற்றும் உரோம் மாநகரில் கடும் பாதுகாப்புக்கு இத்தாலிய அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர் என்று, திருப்பீட செய்தித் தொடர்பாளர் அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி அவர்கள் தெரிவித்தார்.

வத்திக்கானைப் பொருத்தவரை யூபிலி ஆண்டில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்துவதற்கு எவ்வித குறிப்பிட்ட அவசியமும் ஏற்படவில்லை, யூபிலி ஆண்டில் இத்தாலிய அதிகாரிகள் நிலைமையை எவ்வாறு கணிக்கின்றனர் என்பது அவர்களைச் சார்ந்தது என்றும் கூறினார் இயேசு சபை அருள்பணி லொம்பார்தி.

யூபிலி ஆண்டில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து உரோம் சார்ந்துள்ள Lazio மாநில தலைமையகத்தில் இத்திங்களன்று இடம்பெற்ற பத்திரிகையாளர் கூட்டத்தில் பேசிய அருள்பணி லொம்பார்தி அவர்கள் இவ்வாறு கூறினார்.

வத்திக்கான் வானொலி, இத்தாலிய இரயில் அமைப்பு, உரோம் வாகனப் பணிகள் அமைப்பு போன்றவற்றுக்குள் யூபிலி ஆண்டில் இடம்பெறும் ஒத்துழைப்பு குறித்து விளக்கினார் அருள்பணி லொம்பார்தி.

வானொலி நிகழ்ச்சிகள், இரயில் நிலையங்களில் அறிவிப்புகள், சாலை போக்குவரத்து குறித்த இணையதளப் பணிகள், உரோமையில் திருப்பயணிகளுக்கு உதவுதல் போன்றவற்றில் இடம்பெறும் ஒத்துழைப்பு பற்றி இந்தப் பத்திரிகையாளர் கூட்டத்தில் கூறப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.