2015-12-01 15:16:00

கிறிஸ்துவை அறியாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது


டிச.01,2015. உரோம் உர்பானியானம் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுவரும் திருப்பீட நற்செய்தி அறிவிப்புப் பேராயத்தின் 19வது நிறையமர்வு மாநாட்டில்     இச்செவ்வாயன்று உரையாற்றிய கர்தினால் Fernando Filoni அவர்கள், இன்றைய உலகில் கிறிஸ்துவை அறியாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது, திருஅவையின் சவால்களை அதிகரித்து வருகின்றது என்று கூறினார்.

உலகின் எழுநூறு  கோடி மக்களுள் 17.7 விழுக்காட்டினரே கிறிஸ்தவர்கள் என்றும், மறைப்பணித் தளங்களின் பல்வேறு பகுதிகளில் திருமுழுக்குப் பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது என்றும் கூறினார் கர்தினால் Filoni .

ஆப்ரிக்காவில் இவ்வெண்ணிக்கை அதிகம் என்றும் உரைத்த கர்தினால் Filoni அவர்கள், 2005ம் ஆண்டில் 15 கோடியே 30 இலட்சமாக இருந்த இவ்வெண்ணிக்கை, 2013ம் ஆண்டில் 20 கோடியே 60 இலட்சமாக உயர்ந்துள்ளது என்றும் கூறினார்.

அதேநேரம், அமெரிக்காவில் இவ்வெண்ணிக்கை 10.5 விழுக்காடாகவும், ஆசியாவில் 17.4 விழுக்காடாகவும் அதிகரித்துள்ளன என்றும் கர்தினால் Filoni அவர்களின் அறிக்கை கூறுகிறது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி

 








All the contents on this site are copyrighted ©.