2015-12-11 15:25:00

ஐ.எஸ். அரசை முறியடிக்க, தரைப்படைகள்,சமய சுதந்திரம் அவசியம்


டிச.11,2015. தரைப்படைகள், ஐ.எஸ்.அமைப்பு மற்றும் பயங்கரவாதக் குழுக்களின் நிதி வளங்களை முடக்குவது ஆகியவற்றின் வழியாகவே ஐ.எஸ்.இஸ்லாமிய அரசை முறியடிக்க முடியும் என்று முதுபெரும் தந்தை இரபேல் லூயிஸ் சாக்கோ அவர்கள் கூறினார்.

ஈராக் மற்றும் சிரியாவில் கிறிஸ்தவர்களின் நிலை குறித்து உரோமில் நடைபெறும் கருத்தரங்கில் இவ்வாறு உரையாற்றிய முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள், ஈராக்கிலும், சிரியாவிலும் கிறிஸ்தவர்களின் நிலை மிக மோசமடைந்து வருகின்றது என்றும், அரசும் மதமும் பிரித்துப் பார்க்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்நாடுகளில் அனைத்து குடிமக்களுக்கும், சமய சுதந்திரம் மற்றும் முழு குடியுரிமை வழங்கப்படுவதற்கும், அனைத்துவிதமான பயங்கரவாதம், வெறுப்பு, வன்முறை ஆகியவற்றுக்கு எதிரான நடவடிக்கைகளிலும் ஒன்றிணைந்த முயற்சி அவசியம் என்றும் சுட்டிக் காட்டினார் முதுபெரும் தந்தை சாக்கோ.

உரோம் நகரில் இவ்வியாழனன்று தொடங்கியுள்ள இக்கருத்தரங்கு, இச்சனிக்கிழமையன்று நிறைவடையும். இதில் முதுபெரும் தந்தை Yonan அவர்கள் உட்பட பல நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்.

இக்கருத்தரங்கு அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஜார்ஜ் டவுண் பல்கலைக்கழகம், Indianaவிலுள்ள நோத்ரு தாம் பல்கலைக்கழகம், உரோம் சான் எஜிதியோ பக்தி அமைப்பு, கொலம்பஸ் வீரர்க்ள் அமைப்பு ஆகியவை இணைந்து நடத்துகின்றன.  

ஆதாரம் : AsiaNews /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.