2015-12-17 15:50:00

இயேசு பிறந்து வளர்ந்த புனித பூமி,வன்முறையில் சிக்கியுள்ளது


டிச.17,2015. மூன்றாம் உலகப் போர் சிறு, சிறு துண்டுகளாக இவ்வுலகில் நடைபெற்று வருகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ள வார்த்தைகளை நாம் மத்தியக் கிழக்குப் பகுதியின் பல நாடுகளில் கண்டுவருகிறோம் என்று எருசலேம் இலத்தீன் வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை, Fouad Twal அவர்கள் தன் கிறிஸ்மஸ் செய்தியில் கூறியுள்ளார்.

இயேசு பிறந்து வளர்ந்து வாழ்ந்த புனித பூமி, இந்த வன்முறை வலையில் சிக்கித் தவிக்கிறது என்று இச்செய்தியில் கூறியுள்ள முதுபெரும் தந்தை Twal அவர்கள், இந்த வன்முறைக்கு, இஸ்ரேல், பாலஸ்தீன நாட்டுத் தலைவர்கள் பெரும் பங்கு பொறுப்பேற்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு நாடுகளில் நிகழும் போர்களுக்கு, ஆயுதங்களை உருவாக்கும் பெரும் நிறுவனங்களும், விற்பனை செய்யும் தரகர்களுமே முக்கிய காரணம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்று கூறும் முதுபெரும் தந்தை, ஆயுதத் தாக்குதல்களுக்கு, இன்னும் சக்தி வாய்ந்த ஆயுத தாக்குதல்கள் தீர்வைக் கொணராது என்றும் தன் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.

திருத்தந்தை அறிவித்துள்ள இரக்கத்தின் யூபிலி ஆண்டில், திருத்தலங்களைத் தேடிச் செல்லும் விசுவாசிகள், புனித பூமிக்கும் வந்து, அங்கு வாழ்வோரின் துன்பங்களில் பங்கேற்க வேண்டும் என்று முதுபெரும் தந்தை விண்ணப்பித்துள்ளார்.

இவ்வுலகம் இன்னும் துன்பத்தால் சூழப்பட்டிருப்பதால், நமது கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் மிக எளிமையான, மிதமான வகையில் அமையவேண்டும் என்று கூறும் முதுபெரும் தந்தை Twal அவர்கள், துன்புறும் மக்களோடு நமது ஒருங்கிணைப்பைக் காட்ட, கிறிஸ்மஸ் திருப்பலியின்போது சிறப்பு செபங்கள் எழுப்பப்படவேண்டும் என்றும், அனைத்து பங்குகளிலும் கிறிஸ்மஸ் அலங்கார விளக்குகளை ஒருசேர 5 நிமிடங்கள் அணைத்து வைக்கவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.