2015-12-30 14:44:00

கடுகு சிறுத்தாலும் – நாம் நாமாகவே இருப்போம்


கெளதமபுத்தர்  ஒரு பாதையில் நடந்து சென்றார். அப்போது எதிரே வந்த ஒருவர் மிகுந்த கோபத்துடன் புத்தர் முகத்தில் காறி, எச்சிலை துப்பினார். தன் மேல்துண்டால் அதை துடைத்துவிட்டு, "இன்னும் எதாவது சொல்ல விரும்புகிறாயா..?" என்றார் புத்தர். அருகில் நின்ற ஆனந்தாவுக்கு கோபம் வந்தது. புத்தர், ஆனந்தாவை பார்த்து சொன்னார், "ஆனந்தா, இவர் ஏதோ சொல்ல விரும்புகிறார். ஆனால் அவருக்கு வார்த்தைகள் இல்லாததால் இந்த செயலை செய்து விட்டார். வார்த்தைகள் பலவீனமானவை, இவர் என்ன செய்ய முடியும்?" என்று கூறிவிட்டு சென்று விட்டார். துப்பியவருக்கு அன்று முழுவதும் குற்ற உணர்வால் உறக்கமே வரவில்லை. அடுத்த நாள் காலை புத்தரை தேடியலைந்து கண்டுபிடித்து, அவரது காலில் விழுந்து அழுதார். அப்போதும் புத்தர் ஆனந்தாவை பார்த்து சென்னார். "இன்றும் இவர் ஏதோ சொல்ல விரும்புகிறார் ஆனந்தா! ஆனால் வார்த்தைகள் பலவீனமானதால் இச்செயலை செய்துவிட்டார்..!" என்றார். அவர் எழுந்து கேட்டார், "நான் துப்பிய போது நீங்கள் ஏன் திருப்பி ஒரு வார்த்தைகூட ஏசவில்லை?" என்று. அப்போது புத்தர் அழகாக பதில் சொன்னார், "நீ எண்ணியதுபோல் நடக்க, நான் என்ன உன் அடிமையா?" என்று. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.