2016-01-08 15:16:00

கத்தார் கைதிகள் மன்னிப்புக்கு பிலிப்பைன்ஸ் ஆயர் பாராட்டு


சன.08,2016. கத்தார் நாட்டில் பத்து பிலிப்பைன்ஸ் பணியாளர்கள் உட்பட கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டிருப்பதற்கு பிலிப்பைன்ஸ் ஆயர் ஒருவர் தனது பாராட்டுக்களை வெளியிட்டுள்ளார். 

கத்தார் இளவரசர் Sheikh Tamim bin Hamad Al Thani அவர்களின் கனிவும், பிறரன்பும், நன்மைத்தனமும் நிறைந்த இச்செயலுக்கு, பிலிப்பைன்ஸ் திருஅவை நன்றி தெரிவிக்கின்றது என்று, பிலிப்பைன்ஸ் ஆயர் பேரவையின் குடிபெயர்ந்தவர் ஆணைக்குழுத் தலைவரான ஆயர் Ruperto Santos அவர்கள் கூறியுள்ளார்.

இந்த இரக்கத்தின் ஆண்டில் இரக்கமும், பரிவன்பும் நிறைந்த செயல்களை நாங்கள் அனுபவித்துள்ளோம் என்றும், மனித உயிர்கள், தண்டனையிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளன என்றும் ஆயர் Santos அவர்கள் கூறியுள்ளார்.

கத்தாரில் வழங்கப்பட்டுள்ள பொது மன்னிப்பிலிருந்து பிலிப்பைன்ஸ் பணியாளர்கள் பாடம் கற்க வேண்டுமென்றும், தாங்கள் பணியாற்றும் நாடுகளின் சட்டங்களுக்கும், மரபுகளுக்கும் ஏற்ப மிகவும் கட்டுக்கோப்பான வாழ்வு வாழ வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டுள்ளார் ஆயர் Santos.

கத்தாரில், 2015ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதியன்று கடைப்பிடிக்கப்பட்ட தேசிய தினத்தை முன்னிட்டு, கைதிகளுக்கு இம்மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது என்று, கத்தார் வெளியுறவு அமைச்சகம் கூறியது. கத்தாரில் ரம்ஜான் பண்டிகை புனித மாதத்திலும், தேசிய தினத்தன்றும் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுகின்றது. ரம்ஜான் மரபுப்படி, 2015ம் ஆண்டு ஜூலையில் 12 பிலிப்பைன்ஸ் பணியாளர்களுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது.  

ஆதாரம் : CBCP/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.