2016-02-04 16:22:00

இலங்கையின் சுதந்திர தின விழாவில் தமிழிலும் நாட்டுப்பண்


பிப்.04,2016. இலங்கையில் இவ்வியாழனன்று கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழாவில், தமிழ் மொழியிலும், சிங்கள மொழியிலும் நாட்டுப்பண் பாடப்பட்டது.

1949-ம் ஆண்டுக்குப் பின்னர், முதற்தடவையாக இரண்டு மொழிகளிலும் நாட்டுப்பண் பாடப்பட்டுள்ளதாகவும், இந்த மாற்றம் அடிப்படைவாத சிங்கள தேசியவாதிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் பிபிசி செய்தி கூறுகின்றது.

ஆனால், உள்நாட்டுப் போர் முடிந்து 7 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் அரசு முன்னெடுக்கும் நல்லிணக்க முயற்சிகளின் அங்கமாக இந்த இருமொழி நாட்டுப்பண் பார்க்கப்படுகின்றது.

முன்னாள் அரசுத்தலைவர் மகிந்த இராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில், சிங்கள மொழியில் மட்டும் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்ற கோரிக்கை, சில தரப்பினரால் முன்வைக்கப்பட்டதால், சர்ச்சைகள் எழுந்தது என்பதும், இலங்கையில் சிறுபான்மை சமூகங்களான தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் தாய்மொழியாக தமிழ் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கன. 

ஆதாரம் : பிபிசி / வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.