2016-02-09 15:42:00

தமிழகத்தில் இருசக்கர அவசர உதவி சேவை தொடக்கம்


பிப்.09,2016. அவசர மருத்துவ உதவி தேவைப்படும் மக்களுக்கு உடனடியாக அதை வழங்கும் நோக்கத்தில், இருசக்கர மருத்துவ முதலுதவி வாகனங்கள் திட்டம் ஒன்று தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த இருசக்கர முதலுதவி வாகனங்கள், சென்னையின் முக்கிய இடங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் என்றும், பின்னர், மற்ற நகரங்களுக்கும் இத்திட்டம் கொண்டு செல்லப்படும் என்றும், '108' அவசர மருத்துவ வாகனம் போன்று இதுவும் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

'108' அவசர மருத்துவ வாகனத் திட்டத்துடன் இணைந்து செயல்படும் இத்திட்டத்தின் மூலமாக, உடனடி மருத்துவ வசதி தேவைப்படுவோருக்கு, தாமதமில்லாமல் அதை வழங்க முடியும் அதில் ஈடுபட்டுள்ளனர் கூறுகின்றனர்.

ஏறக்குறைய எழுபது இலட்சம் ரூபாய் மதிப்புடைய, அவசர முதலுதவிக்கான 41 இரு சக்கர வாகனங்களின் இந்தச் சேவையை முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இத்திங்களன்று தொடங்கி வைத்தார்.

இருசக்கர மருத்துவ முதலுதவி வாகனத்தில், ஆக்சிஜன் சிலிண்டர், இரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கும் கருவி உட்பட முக்கிய கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும் எனவும், மருத்துவத்தில் பயிற்சி பெற்றவர்களே இதில் பணிபுரிவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

பெண்களுக்கென தனிப்பட்ட இரு சக்கர வாகனங்களும் இந்த திட்டத்தில் அளிக்கப்பட்டுள்ளன. இது தங்களுக்கு கிடைத்துள்ள மிகப் பெரிய வாய்ப்பு என்றும், இந்தச் சவாலை ஏற்று செயல்படுவோம் என்றும் இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் கூறுகின்றனர்.

ஆரம்பத்தில் இந்தத் திட்டம் பகுதி நேரங்களில் மட்டுமே செயல்படுத்தப்படும் என்றும், குறிப்பாக, நகரங்களில் சாலைப் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் காலக் கட்டங்களிலும், பண்டிகை காலங்களிலும்தான் இந்த சேவை வழங்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஆதாரம் : தி இந்து /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.