2016-03-17 16:06:00

கந்தமால் கிறிஸ்தவரை விடுவிக்கவேண்டும் - கர்தினால் கிரேசியஸ்


மார்ச்,17,2016. 2008ம் ஆண்டு, இந்தியாவின் ஒரிஸ்ஸா மாநிலத்தில், சுவாமி லக்ஷ்மானந்தா சரஸ்வதி என்ற இந்து மதத் தலைவர் கொலையுண்டதன் தொடர்பாக, கைது செய்யப்பட்ட ஏழு கிறிஸ்தவர்களை விடுவிக்கவேண்டும் என்று விடுக்கப்பட்டுள்ள ஒரு விண்ணப்பத்தில், இந்தியக் கர்தினால் ஆஸ்வால்ட் கிரேசியஸ் அவர்கள் கையொப்பமிட்டுள்ளார்.

2008ம் ஆண்டு நிகழ்ந்த இந்தக் கொலையுடன் ஏழு கிறிஸ்தவர்கள்  தொடர்புபடுத்தப்பட்டு, 2013ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். தகுந்த ஆதாரங்கள் ஏதுமின்றி கைது செய்யப்பட்டுள்ள இவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சுவாமி சரஸ்வதி அவர்களின் மரணத்தைத் தொடர்ந்து, கந்தமால் பகுதியில் ஏற்பட்ட வன்முறைகளுக்கு காரணமான இந்து அடிப்படைவாதிகள் மீது சட்டப்படி எவ்வித நடவடிக்கையும் எடுக்காதபோது, ஆப்பாவியான கிறிஸ்தவர்கள், தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டிருப்பது தவறு என்று, மனிதாபிமான அமைப்புக்கள் விடுத்துள்ள ஒரு விண்ணப்பத்தில், கர்தினால் கிரேசியஸ் அவர்களும் கையெழுத்திட்டுள்ளார் என்று, UCAN செய்தி கூறுகிறது.

இதற்கிடையே, ஒரிஸ்ஸாவின் கந்தமால் பகுதியில் இறந்த கிறிஸ்தவர்களின் நினைவாக, ஆகஸ்ட் 30ம் தேதி, 'மறைசாட்சிகளின் நாள்' கடைபிடிக்கப்படும் என்று, ஒரிஸ்ஸா ஆயர் பேரவை தீர்மானித்திருப்பதாக, இப்பேரவையின் தலைவரும், கட்டக் புபனேஸ்வர்  பேராயருமான ஜான் பார்வா அவர்கள் Fides செய்தியிடம் கூறியுள்ளார். 

ஆதாரம் : UCAN / Fides / வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.