2016-03-18 16:15:00

ஏமனில் கடத்தப்பட்ட இந்திய அருள்பணியாளர் நிலை என்ன?


மார்ச்,18,2016. ஏமனின் ஏடன் நகரில் அன்னை தெராசாவின் பிறரன்பு சபையைச் சேர்ந்த 4 பேர் கொலை செய்யப்பட்ட வேளையில் கடத்திச் செல்லப்பட்ட இந்திய சலேசிய சபை அருள்பணியாளர் குறித்து, இரண்டு வாரங்கள் கடந்தும் எவ்வித செய்தியும் இல்லை என தலத்திருஅவை தன் கவலையை வெளியிட்டுள்ளது.

இம்மாதம் 4ம் தேதி, ஏமனின் ஏடன் நகரிலுள்ள முதியோர் இல்லத்தில் நுழைந்த தீவிரவாதிகள், அங்கு பணியாற்றி வந்த 4 அருள் சகோதரிகளையும் 12 உடனுழைப்பாளர்களையும் கொன்றபின், அங்கிருந்த இந்திய சலேசிய சபை அருள்பணியாளர் Tom Uzhunnalil அவர்களைக் கடத்திச் சென்றனர்.

கடத்திச் செல்லப்பட்ட அருள்பணியாளர், உயிருடன் இருக்கின்றாரா அல்லது எங்கிருக்கிறார் என்பது குறித்த எவ்வித செய்தியும் இதுவரை கிட்டவில்லை என, கவலையை வெளியிட்டுள்ளார், தெற்கு அரேபியாவிற்கான அப்போஸ்தலிக்க நிர்வாகி, ஆயர் Paul Hinder.

இதற்கிடையே, வன்முறைகளை பெருமளவில் சந்தித்து வரும் ஏமன் நாட்டில், கடந்த திங்களன்று இடம்பெற்ற வெடிகுண்டு தாக்குதலால் 107 பேர் இறந்துள்ளனர். சவுதியிலிருந்து விமானத் தாக்குதல்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

2015 மார்ச் மாதம் முதல் இடம்பெற்றுவரும் மோதல்களால், கடந்த ஓராண்டில், ஏமன் நாட்டில், குறைந்தது 10 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர் என்று Fides செய்திக் குறிப்பு கூறுகிறது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.