2016-03-27 09:47:00

ஓ, கிறிஸ்துவின் சிலுவையே!


உரோம் நகரின் கொலோசேயம் திடலில் மார்ச் 25, புனித வெள்ளியன்று நிகழ்ந்த சிலுவைப்பாதையின் இறுதியில், திருத்தந்தை கூறிய செபத்தின் தமிழாக்கம்:

ஓ கிறிஸ்துவின் சிலுவையே, இறையன்பிற்கும், மனித அநீதிக்கும் அடையாளமே, உன்னதத் தியாகத்திற்கும், கட்டுக்கடங்காத சுயநலத்திற்கும் குறியீடே, மரணத்திற்கும், உயிர்ப்பிற்கும் கருவியே, கீழ்ப்படிதலுக்கும், காட்டிக்கொடுத்தலுக்கும் அடையாளமே,

இன்று எங்கள் சகோதர, சகோதரிகள் கொல்லப்படுவதிலும், உயிரோடு எரிக்கப்படுவதிலும், அரக்கத்தனமான கத்திகளால் தலையும், கழுத்தும் வெட்டப்படுதலிலும், இவையனைத்தையும் கண்டு அச்சம் கொண்டு மௌனம் காப்பதிலும், ஓ கிறிஸ்துவின் சிலுவையே, நீ உயர்த்தப்படுவதைக் காண்கிறோம்.

போர், வன்முறை, இவற்றிலிருந்து தப்பியோடும் குழந்தைகள், பெண்கள், மக்கள், மீண்டும் தங்கள் மரணத்தைச் சந்திப்பதிலும், பல பிலாத்துகள் கரங்களைக் கழுவுவதிலும், ஓ கிறிஸ்துவின் சிலுவையே, உன்னைக் காண்கிறோம்.

இரக்கத்தையும், வாழ்வையும் கற்றுத்தருவதற்குப் பதில், தண்டனை, மரணம் ஆகிய அச்சங்களை ஊட்டும் மரணத்தின் அறிஞர்கள் வடிவில், ஓ கிறிஸ்துவின் சிலுவையே, உன்னைக் காண்கிறோம்.

தங்கள் தற்பெருமைக் கனவுகளைக் களைவதற்குப் பதில், மாசற்றவர்களின் மாண்பைக் களைந்துவிடும் நம்பிக்கைத் துரோகம் செய்யும் பணியாளர்கள் வடிவில், ஓ கிறிஸ்துவின் சிலுவையே, உன்னைக் காண்கிறோம்.

மாசற்ற சகோதர, சகோதரிகளின் இரத்தத்தைக் கொண்டு, போர் என்ற சூளையின் தீயை, தொடர்ந்து வளர்த்துவரும் சக்தி வாய்ந்தவர்கள், போர்க்கருவி வர்த்தகர்கள் வடிவில், ஓ கிறிஸ்துவின் சிலுவையே, உன்னைக் காண்கிறோம்.

வாசலில் பசியுடன் கிடக்கும் லாசர்களை அலட்சியம் செய்துவிட்டு, தங்கள் செல்வங்களைக் குவிப்பதற்கு, களஞ்சியங்களை இடித்துக் கட்டும் மதியிழந்தவர்கள் வடிவில் ஓ கிறிஸ்துவின் சிலுவையே, உன்னைக் காண்கிறோம்.

வருங்காலத் தலைமுறையினரின் எதிர்காலத்தை நிர்மூலமாக்கும் வகையில், தங்கள் சுயநலத்தால் எங்கள் பொதுவான இல்லத்தை அழித்து வருவோரின் வடிவில் ஓ கிறிஸ்துவின் சிலுவையே, உன்னைக் காண்கிறோம்.

மற்றவர்களின் புகழையும், அங்கீகாரத்தையும் பெறுவதைப்பற்றி கவலைப்படாமல், நல்லவற்றை செய்து, உயிர்ப்பிற்கு வழியாய் அமைவோரின் வடிவில் ஓ கிறிஸ்துவின் சிலுவையே, உன்னைக் காண்கிறோம்.

பிறரது இருள்போக்கும் மெழுகுதிரிகளாய் தங்களை எரித்துக்கொண்டு, பணிவுடன் செயலாற்றும் பணியாளர்கள் வடிவில் ஓ கிறிஸ்துவின் சிலுவையே, உன்னைக் காண்கிறோம்.

நீதி, நம்பிக்கை இவற்றின் வெளிப்பாடாக, இரக்கத்தைக் கண்டுகொண்ட இரக்கம் நிறைந்தோர் வடிவில் ஓ கிறிஸ்துவின் சிலுவையே, உன்னைக் காண்கிறோம்.

திருமண வாழ்வு என்ற அழைப்பில், பிரமாணிக்கமாய் வாழ்வோரின் குடும்பங்களில் ஓ கிறிஸ்துவின் சிலுவையே, உன்னைக் காண்கிறோம்.

தங்கள் கிறிஸ்தவ நம்பிக்கைக்காக துன்புற்றாலும், தொடர்ந்து கிறிஸ்துவுக்கும், நற்செய்திக்கும் சாட்சிகளாய் வாழ்வோர் வடிவில் ஓ கிறிஸ்துவின் சிலுவையே, உன்னைக் காண்கிறோம்.

கனவு காண்போர், குழந்தை மனம் கொண்டோர், இவ்வுலகை அதிகம் மனிதமுள்ளதாக, நீதியுள்ளதாக மாற்றுவதற்கு உழைப்போர் வடிவில் ஓ கிறிஸ்துவின் சிலுவையே, உன்னைக் காண்கிறோம்.

கிறிஸ்துவின் சிலுவையே, பாவம் என்ற கடலின் வெள்ளப்பெருக்கிலிருந்து எம்மைக் காக்கும் நோவாவின் பெட்டகமே, எங்களை, தீயோனிடமிருந்தும், தீமைகள் அனைத்திலுமிருந்தும் காத்தருளும்.

கிறிஸ்துவின் சிலுவையே, இரவின் இருளைவிட, உதிக்கும் ஞாயிறு சக்தி வாய்ந்ததெனச் சொல்லித் தா!

காலியான கல்லறை முன்பு, உயிர்ப்பு நிச்சயம் என்ற உண்மைக்கு முன்பு, இறைவனின் அன்பிற்கு முன்பு, வெற்றி பெறுவதுபோல் தோன்றும் தீமை நிற்கமுடியாது என்பதை எங்களுக்குச் சொல்லித் தா!

ஆமென்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.