2016-03-27 14:36:00

தூய பேதுரு வளாகத்தில் உயிர்ப்புப் பெருவிழா திருப்பலி


மார்ச்,27,2016. இஞ்ஞாயிறு இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழா. “இயேசு கிறிஸ்து உயிர்த்துவிட்டார். அன்பு, வெறுப்பையும், வாழ்வு, மரணத்தையும், ஒளி, இருளையும் வெற்றி கண்டுள்ளன” என்ற டுவிட்டர் செய்தியையும் இந்நாளில் வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். இஞ்ஞாயிறு காலை பத்து மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் உயிர்த்தெழுதல் பெருவிழாத் திருப்பலியை தலைமையேற்று நடத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ். திருப்பலி மேடையில் திருத்தந்தை அமர்ந்த இடமும், திருப்பலி நிறைவேற்றிய பீடமும், அதற்கு முன்புறமும், வண்ண மலர்களால், குறிப்பாக, மஞ்சள் நிற மலர்களால் அழகுபடுத்தப்பட்டிருந்தன. இத்திருப்பலியில் கலந்து கொள்வதற்கு வளாகத்திற்குச் செல்லும் மக்கள், காவல்துறையினரால் நன்கு பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே அனுப்பப்படுவதால் பெருந்திரளான மக்கள் அதிகாலையிலே வளாகத்தைச் சுற்றி நின்று கொண்டிருந்தனர். இத்திருப்பலியில், பெல்ஜியம் முன்னாள் அரசர் 2ம் ஆல்பர்ட் அவர்களும், முன்னாள் அரசி பவுலா அவர்களும் கலந்துகொண்டனர். திருப்பலிக்குப் பின்னர், இவர்களை திருத்தந்தை சந்தித்து, அண்மையில் பெல்ஜியத்தின் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் நகரில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல்கள் குறித்து தன் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.