2016-03-29 15:36:00

இஸ்லாமை தழுவியோர், தங்கள் தாய் மதம் திரும்ப மலேசியா அனுமதி


மார்ச்,29,2016. தங்கள் சொந்த மதத்திலிருந்து மாறி, இஸ்லாம் மதத்தைத் தழுவியவர்கள், பின்னர் தங்கள் சொந்த மதத்திற்கு திரும்ப விரும்பினால், அதற்கு தடை விதிக்கக்கூடாது என மலேசியாவின் மாநில உயர் நீதிமன்றம் ஒன்று தீர்ப்பு வழங்கியுள்ளதை பல மதத் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

இஸ்லாமிய சட்டங்களைக் கொண்ட ஷாரியா நீதிமன்றத்தின் அனுமதி பெற்றபின்னரே ஒருவர் இஸ்லாமிலிருந்து வேறு மதத்திற்குச் செல்லமுடியும் என்றிருந்த மலேசிய அரசின், எழுதாத நடைமுறைச் சட்டத்தைப் புரட்டிப்போடும் வகையில் தற்போது Sarawak மாநில உயர் நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.

கிறிஸ்தவராகப் பிறந்த 41 வயது Roneey Anak Rebit என்பவர், அவரின் 10வது வயதில், பெற்றோர்களால், இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், தற்போது தன் தாய் மதத்திற்கே திரும்ப நினைத்தபோது, ஷாரியா நீதிமன்றம் அனுமதி மறுத்தது. இதனைத் தொடர்ந்து,  பொது நீதிமன்றத்தில் Roneey அவர்கள் தொடர்ந்த வழக்கில்,  அவர் கிறிஸ்தவ மதத்தை தழுவதில் தடைவிதிக்க முடியாது என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இஸ்லாமியரை பெரும்பான்மையினராகக் கொண்டு, ஷாரியா சட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துவரும் மலேசியாவில் இத்தகையதொரு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறித்து, மலேசியாவின் பல மதங்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளன. இருப்பினும், மலேசிய மத்திய அரசின் அணுகுமுறை மாற்றங்களுக்காக காத்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

ஆதாரம் : UCAN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.