2016-04-18 15:41:00

திருத்தந்தை, மத்திய ஆப்ரிக்க குடியரசு அரசுத்தலைவர் சந்திப்பு


ஏப்.18,2016. மத்திய ஆப்ரிக்கக் குடியரசின் அரசுத்தலைவர் Faustin Archange Touadéra அவர்கள், இத்திங்கள் நண்பகலில், திருப்பீடத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்துப் பேசினார்.

இச்சந்திப்புக்குப் பின்னர், "Laudato si" திருமடலையும், "Evangeli gaudium" மற்றும் "Amoris laetitia" திருத்தூது அறிவுரை மடல்களையும், அரசுத்தலைவர் Touadéra அவர்களிடம் கொடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கடந்த ஆண்டில், மத்திய ஆப்ரிக்கக் குடியரசுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டு, பாங்குய் நகரில் புனிதக் கதவைத் திறந்ததற்கும், அந்நாட்டில் அமைதி மற்றும் ஒப்புரவு ஏற்படுவதற்குத் திருப்பீடத்தின் பங்கிற்கும் நன்றி தெரிவித்தார் அரசுத்தலைவர் Touadéra.

இச்சந்திப்புக்குப் பின்னர் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும் சந்தித்துப் பேசினார் அரசுத்தலைவர் Touadéra.

மேலும், "திருஅவையில் ஒவ்வோர் அழைப்பும், நம்மை மன்னிப்பவரும், தம்மைப் பின்செல்ல அழைப்பவருமான இயேசுவின் பரிவன்புமிக்கப் பார்வையில் தனது மூலத்தைக் கொண்டுள்ளது" என்பது, திருத்தந்தையின் இஞ்ஞாயிறு டுவிட்டர் செய்தியாக வெளியிடப்பட்டது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.