2016-04-28 13:40:00

இது இரக்கத்தின் காலம் : ஒவ்வொருவரிலும் ஒளிந்திருக்கும் ஒளி


அந்த ஊரிலிருந்த சிற்பி ஒருவர், எவ்வளவு மோசமான கல்லிலிருந்தும் ஓர் அழகான சிற்பத்தை வடிக்கும் அபாரத் திறமையுள்ளவர். இவ்வளவு அழகாக இதை எப்படி உங்களால் வடிக்க முடிந்தது என்று கேட்டால், இந்தச் சிற்பம் ஏற்கனவே அந்தக் கல்லுக்குள்ளே இருந்தது. இதைச் சுற்றியிருந்த வேண்டாத பகுதிகளையெல்லாம் எடுத்துவிட்டேன். அவ்வளவுதான், உள்ளே இருந்த இது வெளியில் வந்துவிட்டது என்பார். ஒரு சின்ன பாறை அல்லது கருங்கல்லைப் பார்த்தால், அந்தக் கல்லின் அமைப்பைக் கவனித்துவிட்டு, இதில் ஒரு துறவி உட்கார்ந்திருக்கிறார், ஒரு வீரர் ஒளிந்திருக்கின்றார் என்று சொல்வார் அவர். உண்மை, தூய்மை, இவற்றுக்கு எடுத்துக்காட்டாக, இருக்கக் கூடிய ஒரு புத்தர் சிலையை வடிக்க வேண்டும் என்று நீண்ட நாள்களாக ஆசைப்பட்டார் அவர். அதற்குத் தகுந்த மாதிரி எந்தக் கல்லும் கண்ணில் தென்படவில்லை. அதனால், அந்த ஊரிலிருந்த புத்த மடாலயத்துக்குப் போனார். அங்கே ஒரு புத்த துறவியைச் சந்தித்து, சுவாமி, புத்தரின் தூய்மை ஒளிந்திருக்கின்ற அந்தக் கல் எங்கே கிடைக்கும் என்று கேட்டார். இன்னும் நீங்கள் அதைக் கண்டுபிடிக்கவில்லையா, சரி, கவலைப்படாதீர்கள், என்கூட வாருங்கள் என்று, அந்த மடாலயத்தின் பின்பக்கம் அழைத்துச் சென்றார் துறவி. அங்கே ஒரு கிணறு இருந்தது. எட்டிப் பாருங்கள் என்றார் துறவி. எட்டிப் பார்த்த சிற்பிக்கு, தண்ணீரிலே தனது உருவமே தெரிந்தது. அப்போது துறவி சொன்னார் – புத்தரை நாம்தான் ஒளித்து வைத்திருக்கிறோம். அவர் நமக்குள்ளேதான் ஒளிந்து இருக்கிறார். நம்மிடமுள்ள கோபம், போலித்தனம், பதற்றம், பேராசை போன்றவை, அவரை அடையாளம் தெரியாதபடி மறைத்து வைத்துள்ளன. அறிவு என்கிற உளியால், அவற்றையெல்லாம் செதுக்கி எடுத்துவிட்டால், அந்த அழகான புத்தர் வெளியே வருவார் என்று.

நம் ஒவ்வொருவருக்குள்ளும் மறைந்திருக்கும் ஒளியைக் கண்டுபிடிக்க, நம்மிலுள்ள தேவையற்ற குணங்களை அகற்ற வேண்டும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.