2016-04-28 16:12:00

மரண தண்டனைக்கு எதிராக, பெரு நாட்டின் ஆயர்கள்


ஏப்ரல்,28,2016. மனித உயிர், இறைவன் வழங்கும் கொடை, எனவே, அது உருவாகும் தருணம் முதல், இயற்கையாக அழியும் வரை அதை மதித்து, காப்பது கிறிஸ்தவர்களின் கடமை என்று பெரு நாட்டின் ஆயர்கள், இச்செவ்வாயன்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

பெரு நாட்டின் பொதுத் தேர்தல்களையொட்டி, மரண தண்டனை குறித்து அங்கு எழுந்துள்ள விவாதங்களையடுத்து, அந்நாட்டு ஆயர்கள் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர் என்று பிதேஸ் செய்தி கூறுகிறது.

குற்றங்களின் தீவிரத்தைப் பொருத்து, அரசு விதிக்கக்கூடிய தண்டனைகள் மாறுபடும் என்பதை ஏற்றுக்கொள்ளும் ஆயர்களின் செய்தி, எக்காரணம் கொண்டும் மரணதண்டனையை திருஅவை ஏற்றுக்கொள்ளாது என்பதையும் தெளிவு படுத்தியுள்ளது.

மரண தண்டனையை ஒழிப்பதற்கும், மனித மாண்பைக் குலைக்கும்வண்ணம் சிறைகளில் நிலவும் சூழல்களை மாற்றுவதற்கும் அனைத்து கிறிஸ்தவர்களும் முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்துள்ள விண்ணப்பத்தை, பெரு நாட்டின் ஆயர்கள், தங்கள் செய்தியில் சுட்டிக் காட்டியுள்ளனர். 

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.