2016-05-02 15:34:00

நாம் அனுபவிக்கும் சித்ரவதைகளே, கிறிஸ்தவ சாட்சியத்தின் விலை


மே,02,2016. சிறிய அளவிலும், பெரிய அளவிலும் அனுபவிக்கப்படும் சித்ரவதைகளே, கிறிஸ்தவ சாட்சியத்தின் விலை என, இத்திங்கள் காலை திருப்பலியில் மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உயிரையே கொடுக்குமளவான பெரிய சித்ரவதைகளாக இருப்பினும், ஏச்சுக்கள், கேலி, கிண்டல்கள் போன்ற சிறிய சித்ரவதைகளாக இருப்பினும், அவைகளில் இயேசுவுக்கு சாட்சியாகச் செயல்படும் பலத்தை தூய ஆவியார் நமக்கு வழங்குகின்றார் என, வத்திக்கானின் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலி மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதிகாலத்தில் சீடர்கள் நற்செய்தியை அறிவித்தபோது, அதைக் கேட்டவர்கள் நெஞ்சங்களிலிருந்து, சாட்சியம் வழங்கத் தூண்டியவர் தூய ஆவியாரே என எடுத்துக்காட்டுகளுடன் எடுத்துரைத்த திருத்தந்தை, இயேசுவை நெருங்கிச் செல்ல நமக்கு உதவும் ஒவ்வொரு வார்த்தையிலும் தூய ஆவியாரே செயலாற்றுகிறார் எனவும் கூறினார்.

நாம் இயேசுவின் சாட்சியாக விளங்குவது, தூய ஆவியாரின் வல்லமையின் உதவியுடனேயே எனவும் உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வார்த்தை வழியாக என்பதைவிட, வாழ்வு சாட்சியம் வழியாக இயேசுவை அறியச் செய்வோம் என்ற அழைப்பையும் முன்வைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.