2016-05-04 16:21:00

அருள்பணி உழுன்னலில் குறித்து தெளிவான தகவல்கள் இல்லை


மே,04,2016. ஏமன் நாட்டின் ஏடென் நகரில், இரு மாதங்களுக்கு முன் கடத்தப்பட்ட அருள்பணி தாமஸ் உழுன்னலில் அவர்களைக் குறித்து இன்னும் தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை என்று பிதேஸ் (Fides) செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

மார்ச் மாதம் 4ம் தேதி, ஏடென் நகரில், பிறரன்பு மறைப்பணியாளர் சபையைச் சேர்ந்த 4 அருள் சகோதரிகள் உட்பட, 12 பேரைக் கொலை செய்த தீவிரவாதக் கும்பல் ஒன்று, அவ்வில்லத்தில் தங்கியிருந்த அருள்பணி உழுன்னலில் அவர்களைக் கடத்திச் சென்றது.

அருள்பணி உழுன்னலில் அவர்கள் உயிருடன் இருப்பதாக பத்து நாட்களுக்கு முன் தனக்குத் தகவல் கிடைத்தது என்றும், அதற்குப் பின், வேறு எந்தத் தகவலும் வெளியாகவில்லை என்றும், தெற்கு அரேபிய அப்போஸ்தலிக்க நிர்வாகி, ஆயர் பால் ஹிண்டர் அவர்கள் பிதேஸ் நிறுவனத்திடம் கூறினார்.

அருளாளர் அன்னை தெரேசா உருவாக்கிய சபையைச் சேர்ந்த 4 அருள் சகோதரிகள் கொலையுண்ட பின்னரும், ஏமன் நாட்டில், அச்சபையின் சகோதரிகள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர் என்று பிதேஸ் செய்தி மேலும் கூறுகிறது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.