2016-05-09 16:05:00

காணாமல் போனவர்கள் குறித்து ஐ.நா. வல்லுநர்கள் கவலை


மே,09,2016. இலங்கையில் போர் நடந்த காலத்துடன் ஒப்பிடுகையில், தற்போது சித்திரவதைகள் குறைந்துள்ளபோதிலும் அதற்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை என ஐ.நா.வின் இரண்டு உயர் அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

அரசின் அழைப்பை ஏற்று, இலங்கையில் ஒருவாரம் பயணம் மேற்கொண்டிருந்த, ஐக்கிய நாடுகள் அவை, மனித உரிமைகள் அமைப்பின் வல்லுநர்கள் மோனிக்கா பின்டோ மற்றும் யுவான் இ மென்டிஸ், ஆகிய இருவரும், தமது பயணத்தின் முடிவில், கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பின்போது இக்கருத்தைத் தெரிவித்தனர்.

போர் நடந்த காலப்பகுதியில் ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல் போகும்படி செய்யப்பட்டுள்ளனர் எனவும், அது தொடர்பாக, நாடு தழுவிய விசாரணை தேவைப்படுகிறது எனவும் யுவான் இ மென்டிஸ் அவர்கள் கூறினார்.

நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தையடுத்து, நாடு சனாநயகத்தின் பாதையில் பயணித்துக்கொண்டிருக்கின்ற போதிலும், இப்படியான விடயங்கள் தடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நீதித்துறை சிறந்த கட்டமைப்புடன் இருக்கின்ற போதிலும், அதனை மேலும் வலுப்படுத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இந்தச் செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய நீதித்துறைக்கான ஐ.நா.வின். வல்லுநர் மோனிக்கா பின்டோ அவர்கள் தெரிவித்தார்.

தமது பயணம் தொடர்பாக அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறிய மோனிக்கா பின்டோ அவர்கள், அந்த அறிக்கை, இலங்கை அரசிடம், விரைவில் கையளிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

ஆதாரம் : BBC / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.