2016-06-08 17:18:00

திருத்தந்தை பிரான்சிஸ் : பெருங்கடல்களைப் பாதுகாப்போம்


ஜூன்,08,2016. “தண்ணீர் விநியோகத்திற்கும், பல்வேறு உயிரினங்களின் வாழ்வுக்கும் உயிர்நாடிகளாக விளங்கும் “உலகளாவியப் பொதுப்பொருள்களின்” ஓர் அங்கமாக இருக்கின்ற பெருங்கடல்களைப் பாதுகாப்போம்”என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில், இப்புதனன்று வெளியிடப்பட்டன.

"நலமான பெருங்கடல்கள், நலமான பூமி" என்ற தலைப்பில் இப்புதனன்று உலக பெருங்கடல்கள் தினம் கடைப்பிடிக்கப்பட்டதை முன்னிட்டு, திருத்தந்தையின் இப்புதன் டுவிட்டர் செய்தி இத்தினத்தை மையப்படுத்தி உள்ளது.

மேலும், அமைதிக்கு ஒரு நிமிடம் என்ற தலைப்பில், இப்புதனன்று, செப நாள் அனுபவத்தைப் பெற்ற, கத்தோலிக்க கழகத்தினருக்கு, இப்புதன் பொது மறைக்கல்வியுரையின் இறுதியில் வாழ்த்து தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இன்னும், அர்ஜென்டீனாவில் நடைபெறும், 11வது தேசிய திருநற்கருணை மாநாட்டிற்குச் செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தை, விசுவாசிகள் எல்லாரும் திருநற்கருணை மீது தங்களின் அன்பை ஆழப்படுத்துவதிலும், அதிகத் தேவையில் இருப்போர்க்கு உதவுவதற்குத் தங்களை அர்ப்பணிப்பதிலும் தொடர்ந்து வளர்வார்களாக என்று கூறியுள்ளார். இச்செய்தியை, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், திருத்தந்தையின் பெயரால் அனுப்பியுள்ளார்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.