2016-07-16 15:36:00

உலகில் 263 மில்லியன் சிறார்,இளையோர், பள்ளிக்குச் செல்லவில்லை


ஜூலை,16,2016. உலகில், 26 கோடியே 30 இலட்சம் சிறார் மற்றும் இளையோர், பள்ளிக்குச் செல்லவில்லை என்றும், இவ்வெண்ணிக்கை ஐரோப்பிய மக்கள்தொகையில் ஏறத்தாழ நான்கில் ஒரு பகுதி என்றும் யுனெஸ்கோ நிறுவனம் இவ்வெள்ளியன்று அறிவித்தது.

இந்தத் தகவலை வெளியிட்டுப் பேசிய யுனெஸ்கோ நிறுவன பொது இயக்குனர் இரினா பொக்கோவா அவர்கள், 2030ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு குழந்தைக்கும் ஆரம்ப மற்றும் நடுத்தரக் கல்வி வழங்கப்படும் என்று நாடுகள் உறுதியளித்துள்ளதையும் குறிப்பிட்டார்.

தற்போதைய நிலையை நோக்கும்போது, 2030ம் ஆண்டின் இலக்கை எட்டுவது கடினம் என்றும் கூறிய பொக்கோவா அவர்கள், ஆப்ரிக்காவின் சஹாராவையடுத்த பகுதிகளில் இவ்வெண்ணிக்கை அதிகம் என்றும் கூறினார்.

ஏறக்குறைய எல்லா நாடுகளிலும் ஆரம்பக்கல்வி கட்டாயமாக இருப்பதால், பள்ளிக்குச் செல்லாத 6 வயதுக்கும் 11 வயதுக்கும் உட்பட்ட சிறாரைவிட, 15 வயதுக்கும் 17 வயதுக்கும் உட்பட்ட வளர்இளம் பருவத்தினரின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகம் என்றும் கூறினார் யுனெஸ்கோ இயக்குனர் பொக்கோவா.

வட ஆப்ரிக்காவிலும், மேற்கு ஆசியாவிலும், 100 சிறுவர்க்கு 85 சிறுமிகள் வீதம் பள்ளிக்குச் செல்கின்றனர்.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.